இஸ்ரேல் – லெபனான் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹிஸ்புல்லா மறுத்துள்ளது
Share
இஸ்ரேல், லெபனான் இடையேயான ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஏற்க மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர். இதனால், இஸ்ரேல் – ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், ஹிஸ்புல்லாவின் ஆயுதக்கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் மீது அவ்வப்போது டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் ஜோசப் அரோன் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அமெரிக்காவில் இஸ்ரேல் – லெபனான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டன. ஒப்பந்தப்படி ஹிஸ்புல்லா ஆயுதக்குழு இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்தி ஆயுதங்களை கைவிட வேண்டும். ஹிஸ்புல்லா ஆயுதங்களை கைவிட்டு தாக்குதலை நிறுத்தியவுடன் லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல், லெபனான் இடையேயான ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஏற்க மறுத்துள்ளது.















