ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளிக்கு ஜே.டி.வான்ஸ் ஆதரவு தெரிவித்தார்
Share
ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளிக்கு ஜே.டி.வான்ஸ் ஆதரவு தெரிவித்தார். அமெரிக்காவில் மாகாணங்களுக்கான ஆளுனர் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் ஒஹியோ மாகாண ஆளுனர் பதவிக்கு, குடியரசுக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விவேக் ராமசாமி (வயது 41) போட்டியிடுகிறார்.
டிரம்பின் முழு ஆதரவைப் பெற்ற இவர், கடந்த மே மாதம் நடந்த முதல்கட்டத் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்வானார். இந்த நிலையில், ஓஹியோவில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடியரசுக் கட்சியின் சிறந்த வேட்பாளரான எனது நண்பர் விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாணத்தின் அடுத்த சிறந்த ஆளுனராக விளங்குவார்” என்று கூறி தனது அதிகாரப்பூர்வ ஆதரவை தெரிவித்தார். அமெரிக்காவின் சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமியின் பெற்றோர். இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து குடியேறியவர்கள் ஆவர். இவர், டிரம்பின் முந்தைய நிர்வாகத்தில் அரசுத் திறன் மேம்பாட்டுத் துறையின் இணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.















