கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் பதாகை வெளியாகியது
Share
இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் பதாகை வெளியாகியது, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது 10-வது திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு ‘டோரதி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், படம் சர்வதேச திரைப்பட விழாவிலும் இடம்பிடித்திருப்பது படக்குழுவுக்கு பெருமை சேர்த்துள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், ‘பேட்ட’ திரைப்படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதே நேரத்தில், தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அல்லது பின்னணி இசையை முக்கிய காட்சிகளில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது முதன்முறையாக, முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.















