LOADING

Type to search

இந்திய அரசியல்

“கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்தார்

Share

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவரும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது. பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 8-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார். தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப்பற்று, துணிச்சல், கடமை உணர்வு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதோடு, இளம் தலைமுறையினரிடையே வீர உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை வளர்த்திடும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்கள் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உயரிய விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.