LOADING

Type to search

அரசியல்

சென்னையில் பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது

Share

தமிழகத்தில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றுள்ளது.

பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு மேலும் புதிதாக ஒரு இலக்கிய ஆளுமையின் நேர்காணலை உள்ளடக்கி 20 நேர்காணல்களின் தொகுப்பாக யாழ்ப்பாணத்தில் ‘எங்கட புத்தகங்கள்’ என்ற பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தற்போது வேர்முகங்கள் நூலை 3ஆவது வெளியீடாக சென்னையில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா கடந்த யூலை 8ம் திகதி புதன் கிழமை (08.07.2026) அண்ணா நூற்றாண்டு நூலக நூல் வெளியீட்டுக் கட்டட அரங்கில் இடம் பெற்றது.

பதிப்பாளர் வைகறைவாணனின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் இயக்குநரும் நடிகரும் படைப்பாளியுமான கவிதா பாரதி வெளியிட்டு வைக்க, ஓவியர் டிராட்ள்கி மருது முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூல் தொடர்பான கருத்துகளை காமராஜர் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. சுப்பிரமணியன், படைப்பாளியும் ஊடகவியலாளருமான ந. சுந்தரபுத்தன், வரலாற்று ஆய்வாளர் பழ. அதியமான் ஆகியோர் ஆற்றியிருந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியின் நூலாசிரியரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் ஏற்புரையை நிகழ்த்தினார்.

இத் தொகுப்பில் கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி நா. சுப்பிரமணியன், பாரதிராஜா, சுஜாதா, டிராட்ஸ்கி மருது, சா. கந்தசாமி, மணவை முஸ்தபா, செங்கை அழியான், தி. சு. சதாசிவம். த. ஜெயகாந்தன், அறிவுமதி, டி திலீப்குமார், சு. வில்வரத்தினம், பாரதிபுத்திரன், புதுவை இரத்தினதுரை, கலாநிதி பரமு. புஸ்பரட்ணம், இ. பத்மநாபஐயர், ஞானரதன், இன்குலாப், கி.பி.அரவிந்தன் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இருபது கலை இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு காணப்பெறும் படங்கள் சென்னை விழாவில் எடுக்கப்பட்டவையாகும்.