LOADING

Type to search

இந்திய அரசியல்

“நீதி கெஞ்சி கேட்பதல்ல, போராடிப் பெறுவது”- காஜிப்பூர் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்

Share

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூரில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைத் தடுக்க, அச்சுறுத்தல்களும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஹத்ராஸ், கத்வா, உன்னாவ் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது காஜிப்பூர் என பாலியல் வன்கொடுமை, கொலைகள் தொடர் நிகழ்வாக மாறி வருகின்றது. மணிப்பூரைச் சேர்ந்த இளம் பெண் நீதிக்காக காத்திருந்த போதே தன் கடைசி மூச்சை விட்டார். ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டவர்கள் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழை, எளிய மக்களாகவும் இருக்கிறார்கள். குற்றம் இழைப்பவர்களுக்கு பாதுகாப்பும், பாதிக்கப்பட்டவர்களுக்கு துன்புறுத்தலும் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் மவுனம் காக்கிறார்கள்.

குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும். பிரதமர் மோடியும், முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் இதற்கு பதில் அளிக்க வேண்டும். உங்கள் ஆட்சியில் பெண்கள் ஏன் இவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள்? இத்தகைய சூழல்களில் நீதியானது கெஞ்சி கேட்கப்படுவதில்லை. அது போராடி பறித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.