பயங்கரவாத மையங்கள் இனி தண்டனையில் இருந்து தப்ப முடியாது – ராஜ்நாத் சிங்
Share
கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தற்போது இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் 2017 ம் ஆண்டு இந்தியா முழு நேர உறுப்பினர் ஆனது. இந்த அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு, கிஸ்கிஸ்தானின் பிஸ்கெக் நகரில் நடந்தது. பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:: பயங்கரவாதத்தை கையாள்வதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது . பயங்கரவாதத்திற்கு நாடு, மதம் கிடையாது, எந்தவொரு குறையையும் பயங்கரவாத செயல்களுக்கு காரணமாகக் கூற முடியாது. கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு. பயங்கரவாதத்தின் மையப்புள்ளிகள் இனி தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையே சாட்சி. பயங்கரவாதிகள் எங்கு ஓடி ஒளிந்திருந்தாலும் இந்தியாவால் அவர்களைக் கண்டறிந்து துல்லியமாய் தாக்கி தண்டிக்க முடியும் என்பதை இந்த ஆபரேஷன் நிரூபித்துள்ளது.
அரசு ஆதரவுடன் செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உலகம் புறக்கணிக்கக் கூடாது. இது ஒரு நாட்டின் இறையாண்மையையே தாக்குகிறது. “கண்ணுக்குக் கண் என்பது உலகத்தையே குருடாக்கிவிடும்” என்று மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். மோதல்களுக்கு தீர்வுகாண சண்டையிடுவதை விட பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே சிறந்தது. தற்போதைய உலகம் பிளவுபட்டுள்ள நிலையில், மோதல்களைத் தவிர்த்து அனைத்து குடிமக்களும் கண்ணியத்துடன் நடத்தப்படும் ஒரு முறையான உலக ஒழுங்கு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.















