LOADING

Type to search

இந்திய அரசியல்

பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்

Share

பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6ஆம் தேதி தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 2 கோடிக்கு வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பழனி மலையடிவார காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பழனி சார்பதிவாளர்கள் இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய மறுத்து அவர்கள் விடுப்பில் சென்றனர். இதனால் கொடைக்கானலில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டினை பழனி அலுவலகத்திற்கு அழைத்து வந்து முறைகேடான பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்திருந்த நிலையில், ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது. அதில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பழனி முருகன் கோவில் கட் டுப்பாட்டில் உள்ள ஒரு மடத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்று கூறப்பட்டு உள்ளது. அந்த சொத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் பதிவான வழக்கை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரிக்கின்றனர். இதில் இந்த சொத்தின் ஆவணங்களை போலியாக தயாரிப்பதில் அன்வர்தீன் என்பவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததும், 1998-ம் ஆண்டு முதலே சம்பந்தப்பட்ட சொத்தை அபகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் அன்வர்தீன் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சொத்தை முறைகேடாக பதிவு செய்வதற்கு பழனி சார்பதிவாளர் பாலசுந்தருக்கு, அன்வர்தீன் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.விற்பனையாளர் அவசர, அவசரமாக அந்த சொத்தை மொத்தம் ரூ.2 கோடிக்கு விற்றுள்ளார். இதுவும் அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது. இதுவும் மனுதாரருக்கு எதிராக அமைகிறது.மேலும் இந்த ஆவண பதிவில் ஈடுபட்ட அதிகாரிகள், அறங்காவலர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டு குறித்தும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும். பழனி சார்பதிவாளர் பாலசுந்தரால் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் கொடைக்கானலில் இருந்து பொறுப்பு சார் பதிவாளராக வந்திருந்த ஜஸ்டின் மணிகண்டன் நேரடியாக செயல்பட்டு பதிவு நடவடிக்கையை முடித்து இருக்கிறார். இது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு உதவும் நோக்கில், அவர் வேண்டுமென்றே அந்த ஆவணத்தை பதிவு செய்துள்ளார் என்பதை காட்டுகிறது. எனவே அவரிடம் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகிறது.எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஜஸ்டின் மணி கண்டனுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.” என்று உத்தரவிட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் ஐந்தாவதாக கைது செய்யப்பட்டுள்ளார்.