LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் செயற்பாடுகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் அதைக் கலைக்கத் தீர்மானம்

Share

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் உபாலி சமரசிங்க நடவடிக்கை.

மன்னார் நிருபர்

(14-05-2026)

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம் 14ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் (14) மதியம் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்கக,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள், திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள்.

கடந்த பல வருடங்களாக இந்த ஈவு வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவற்றை தீர்ப்பதற்கான காத்திரமான ஒரு கூட்டம் இடம்பெற்றது.

இந்த வருடம் 32 ஏக்கர் விவசாய பூமி ஏலம் விடப்பட்டிருக்கிறது – கிட்டத்தட்ட 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.

இந்தத் தொகை கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அமைப்புக்களால் தங்களுடைய தேவைகளுக்காக , நிர்வாக தேவைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் செலவிடப் பட்டதாக அவர்களால் கூறப்பட்டது.

அது மட்டுமல்லாமல் கல்வி அபிவிருத்தி நிதியம் என்கிற ஒரு நிதியத்திற்கு மாணவர்களுடைய குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக செலவிடப்பட்ட தாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் பல்வேறுபட்ட குளறுபடிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஈவு வழங்குவதிலும் பாரபட்சங்கள் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு வருகின்ற வருடம் மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் ஏனைய சம்பந்தமான திணைக்களங்கள் முழுமையாக ஒன்றுகூடி, ஒரு பொருத்தமான, ஏழை விவசாயிகளை பாதிக்காத வகையில் ஒரு காத்திரமான திட்ட வரைவு ஒன்றை மேற்கொள்ள குறித்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவை மாற்றி அமைக்க குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதை மாற்றியமைப்பது தொடர்பாகவும் விவசாய அமைச்சருடன் கலந்துரையாடி முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு குழுவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட குழு கடந்த ஐந்து வருடங்களாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த விடயங்களை எதிர்வரும் வருடங்களிலே முழுமையாக சீர் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இங்கு கையாளப்பட்ட நிதிகளுக்கான சரியான கணக்கறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிப்பதற்கு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க.. .

மன்னார் மாவட்ட குழுவின் விசேட கூட்டமானது இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கு (சிறுபோகம்) யோத வாவியின் கீழ் விவசாயிகளுக்கு வயல் நிலங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

: மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமேயான பிரத்யேக மேலாண்மைக் குழு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஏனைய மாவட்டங்களில் இவ்வாறான குழுக்கள் இல்லை. இந்தக் குழுவின் செயற்பாடுகளில் சில முறைகேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 5-6 ஆண்டுகளாக இக்குழுவின் ஊடாகச் சிறு போகச் சாகுபடிக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்ட போது, சில அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வருமானத்திற்காக வும் பெருமளவிலான வயல் நிலங்கள் (சுமார் 25-30 ஏக்கர் வரை) அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு விவசாயிக்கு 13 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், நடைமுறையில் 1, 2 அல்லது 3 ஏக்கர் மட்டுமே பயிரிடும் சிறு விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் தொடர்ச்சியாக நிலம் மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, 2026 ஆம் அடுத்த ஆண்டு முதல், விவசாய அமைச்சின் நேரடி வழிகாட்டலின் கீழ் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும்.

2021 ஆம் ஆண்டு முதல் இக்குழுவில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான விசாரணை ஒன்றை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

2026 சிறுபோக நெல் கொள்முதலுக்காகத் திறை சேரியினால் (Treasury) பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் போதியளவு நெல் கையிருப்பில் உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக விவசாயிகள் மீண்டும் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது.

திறை சேரியினால் ஒதுக்கப்பட்ட நிதி தற்போது முடிவடைந்துள்ளது.மன்னார் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மேலதிகமாக 100 மில்லியன் ரூபாய் நிதியை வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையை பெற்றுத் தருவதை உறுதி செய்யத் தேவையான அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்-என அவர் மேலும் தெரிவித்தார்.