LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்

Share

யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் வட மாகாணத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும், லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தவசுதன் சாருஜன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி விளையாட்டிற்கு அடிமையாகிய நிலையில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லை. கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வந்து, பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளார். இதனால் குறித்த மாணவன் 25.10.2024 அன்று வீட்டினை விட்டு வெளியேறி சென்றுள்ளான். இது குறித்து பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

குறித்த மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை 2ம் திகதி புதன் இரவு வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோருடன் சேர்ப்பித்தார். அந்த மாணவன் 3ம் திகதி அன்று அதிகாலை 2 மணிவரை குறித்த கேமினை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகேயுள்ள காணியில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளான்.

இந்நிலையில் மாணவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.