LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள பகிரங்கக் கடிதம்!

Share

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசுசெய்து, அனுமதிபெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய காலமற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன்.

அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு:-

01. வன ஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல்.

02. முப் படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல்.

03. இந்தியமுதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல்.

04. வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல்.

05. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல்.

06. நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல்.

07. ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து,உறுதிபடுத்தல்.

08. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல்.

09. அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல்.

10. இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல்.

11. பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

12. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல்.

13. பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும் விரைவுபடுத்தல்.

14. சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல்.

15. உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல்.

16. உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல்.

17. இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல்.

18. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களைஅமைத்தல்.

19. வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல்.

20. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல்.

21. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல்.

22. கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல்.

23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றை செயற்படுத்தல்.

24. புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல்.

25. வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல்.

26. வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல்.

27. வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல்

28. அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல்.

29. காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல்.

30. பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல்

31. சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல்

32. கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல்.

33. அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல்.