சாவகச்சேரி நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் திறந்து வைத்தார்!
Share

சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன் அமரர்களான பொன்னுபழநி, புவனேஸ்வரி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக அவரது உறவினர்களினால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கியை திறந்து வைத்து உரையாற்றிய செயலாளர் நாயகம்,
“சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சிவன் கோயில் தீர்த்த கிணற்றில் இருந்து நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்படும் குடிநீரையும், அதற்கான கட்டமைப்புக்களையும் பாதுகாத்து பயன்படுத்த வேண்டியது சாவகச்சேரி மக்களின் கடப்பாடு.
மேலும், இந்த விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் தொடர்ச்சியாக எனக்கு நினைவுபடுத்திய விடயத்தை முன்னகர்த்திய தோழர்களான மெடிஸ்கோ, தர்சன் ஆகியோருக்கும் தொல்லியல் திணைக்கள அதிகாரகள், மற்றும் நீர்தாங்கியை அமைத்திருக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் ” எனத் தெரிவித்தார்.
கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க குறித்த கிணற்றின் நீரை பயன்படுத்துவதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்காத நிலையில் அப்போது அமைச்சராக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலையிட்டு, அனுமதியை பெற்றுக் கொடுத்ததுடன் நீர்தாங்கிக்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மாராட்சி பிரதேச அமைப்பாளர் மெடிஸ்கோ, உதவி அமைப்பாளர் தர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.