LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிழக்கில் உருவாகியுள்ளது ”குற்றவாளிகள் கூட்டமைப்பா?”

Share

‘’உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ளவர்களில் ஒருவரான பிள்ளையான் கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.அடுத்தவரான கருணா அம்மான் படுகொலைகள்,ஆட்கடத்தல்கள் குற்றச்சாட்டில் அண்மையில் பிரிட்டன் அரசினால் தடை விதிக்கப்பட்டவர்.அடுத்தவரான வியாழேந்திரன் இலஞ்சக் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் இருப்பவர். அத்துடன் ”கிழக்குத்தமிழர் கூட்டமைப்பு”என்ற பெயரும் இன்னொருவரிடமிருந்து திருடப்பட்டது ‘’

கே.பாலா

நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 8,300க்கு மேற்பட்ட ஆசனங்களுக்காக 80000 க்கும்மேற்பட்ட வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் ,சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்குகின்றனர். இதனால் இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதுடன் தீவிர தேர்தல் பிரசாரங்களும் சேறடிப்பு பிரசாரங்களும் ஆரம்பமாகி விட்டன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை பல வரலாற்றுப்பதிவுகளும் இடம்பெறவுள்ளன. அதாவது உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகளவான அரசியல் கட்சிகள்,சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடும் தேர்தல்,அதிகளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தேர்தல் ,இளைஞர் -யுவதிகள் அதிகளவில் போட்டியிடும் தேர்தல் என்ற வரலாற்று பதிவுகளுடன் பல உள்ளூராட்சி சபைகளில் குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பல உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் சுயேச்சைக்குழுவும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத தேர்தல் என்ற பதிவையும் இத்தேர்தல் ஏற்படுத்தப் போகின்றது.

இதனால்தான் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பல உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் கூட்டணி அமைப்பதில் இம்முறை அதிக ஆர்வம் காட்டியிருந்தன.இதில் சில கூட்டணிகள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டபோதிலும் பல கூட்டணிகளின் பேச்சுக்கள் தோல்வியடைந்து கூட்டணி முறிவுகளும் இடம்பெற்றுள்ளன. இதில் பிரதான சில தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காதுவிட்டால் அப்போது ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்த ஆட்சியமைப்பது தொடர்பில் பேசலாம் என்ற திட்டத்துடனும் உள்ளன.

இவ்வாறாக வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்ற அமைக்கப்பட்ட கூட்டணிகளில் விசித்திரமானதும் வில்லங்கமானதும் விமர்சனத்துக்குள்ளானதும் குற்றவாளிகளின் கூட்டமைப்பாக கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” அமைந்துள்ளது. ஏன் இக்கூட்டமைப்பு அவ்வாறான தொரு விசித்திர கூட்டமைப்பாக அமைந்துள்ளது என்பதனைப் பார்ப்போம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”என்ற கூட்டணியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

இதில் முதல் இரு கட்சிகளின் தலைவர்களான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ,கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்து விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் பேரினவாதிகளுக்கு காட்டிக்கொடுத்துவிட்டு வெளியேறி இன்றுவரை பேரினவாதிகளினதும் இராணுவத்தினதும் புலனாய்வுத்துறையினதும் கைக்கூலிகளாகவும் ஒட்டுக்குழுக்களாகவும் சேவை செய்பவர்கள். பேரினவாத அரசுகளில் .கிழக்கு மாகாண முதலமைச்சர்,இராஜாங்க , பிரதி அமைச்சர் பதவிகளை வகித்தவர்கள்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக கருணா அம்மானும் உ ப தலைவராக பிள்ளையானும் இருந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரலில் கட்சியில் இடம்பெற்ற உள்ளக மோதலை அடுத்து, கருணா அம்மான் கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிள்ளையான் கட்சித் தலைவரானார். அடுத்தவரான சதாசிவம் வியாழேந்திரன் .தமிழ் மக்கள் விடுதலைக்கழகம் (புளொட் )என்ற தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான இயக்கத்தின் உறுப்பினராகவிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளியாகி பாராளுமன்ற உறுப்பினராகி தனது தலைமைக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்து காட்டிக்கொடுத்து விட்டு பேரினவாத அரசில் இராஜாங்க அமைச்சர் பதவி வகித்தவர்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ,கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்,அடுத்தவரான சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இந்த மூவரின் மீதும் தமது தலைமைகளைகாட்டிக் கொடுத்தல்,தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தல் குற்றங்களை விடவும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், கப்பம் கோரல்கள், மணல் கடத்தல்கள்,காணி பிடிப்புக்கள், இலஞ்சம் கோரல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இதில் பிள்ளையான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிள்ளையான் சிறையில் இருந்தவாறே 2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார் இதனையடுத்து 2020 நவம்பர் 24 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் கோத்தபாய ராஜபக்ச அரசில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் பிள்ளையான் மீது உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்ட ஆசாத் மௌலானா என்பவர் பகிரங்கமாகவே பல குற்றச்சாட்டுகளை பிள்ளையான் மீது சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் வாக்குமூலங்களையும் அளித்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நேர்மையாக நடைபெறுமாகவிருந்தால் பிள்ளையான் மீண்டும் சிறை செல்ல நேரிடும்.

அடுத்தவரான கருணா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004 இல் வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார். அரசின் கைக்கூலியானார் .இதற்கிடையில் கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து, 2007 ஆம் ஆண்டு அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு இரகசியமாக லண்டனுக்கு சென்ற கருணா அம்மான், போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்

இந்நிலையில் அரசியலில் நுழைந்த அவர் 2008 அக்டோபர் 7 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.பின்னர் .மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து உப தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.இவர் 2010 பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் மக்கள் செல்வாக்கை இழந்த இவர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தபோதும் அரசியலில் ஒதுங்கியே இருந்தார். இவர்மீது பல்வேறு படுகொலைகள்,ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் உள்ளன. இவ்வாறான நிலையில்தான் இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக கருதப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரியா, ஆகியோருடன் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய கருணா அம்மானுக்கும் பிரிட்டன் அரசு அண்மையில் தடை விதித்தது.

அடுத்தவர் சதாசிவம் வியாழேந்திரன் . தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினரான இவர் 2015 பாராளுமன்றத் தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார் 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது, 2018 அக்டோபர் 26 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக அறிவித்தார் இதனை அடுத்து மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்சவின் நியமனத்தினை எதிர்த்த நிலையில் வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து கட்சி தாவினார் .இவருக்கு 2018 நவம்பர் 2 இல் ராஜபக்ஸவின் அரசில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2018 நவம்பர் 14 இல் மஹிந்த ராஜபக்ஸ அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இவர் பதவி இழந்தார்.

பின்னர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் இவருக்கு மஹிந்த அரசில் தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.இறுதியாக நடந்த தேர்தலில் போட்டியிட முனைந்தபோதும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளநிலையில் தற்போது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .கடந்த வருடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் செயலாளர் ,அமைப்பாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச உழல் ஆணைக்குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் திகதி வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளராக இருந்த அவரது சகோதரர் காணி ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார் .அத்துடன் வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராக இருந்த போது மட்டக்களப்பு மன்றேசா வீதியில் உள்ள அவரின் வீட்டுக்கு முன்பாக 2021-06-21ஆம் திகதியன்று ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்தரம் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவர் குற்றச்சாட்டுக்குள்ளானார்.

ஆக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ளவர்களில் ஒருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க சிவநேசதுரை சந்திரகாந்தன் , கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய மூவரும் குற்றவாளிகளாகவே உள்ளனர். பிள்ளையான் ஏற்கனவே சிறை வாசம் அனுபவித்தவர் . எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சிறை செல்லவேண்டிய நிலையில் இருப்பவர்.அடுத்தவரான கருணா அம்மான் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் அரசினால் தடைவிதிக்கப்பட்டவர். அடுத்தவரான வியாழேந்திரன் இலஞ்சக் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் இருப்பவர். ஆகையால் இந்த ”கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” குற்றவாளிகளின் கூட்டமைப்பாகவே காணப்படுகின்றது.

அதுமட்டுமல்ல ”கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் ‘கிழக்குத் தமி ழர் கூட்டமைப்பு” எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உண்மையான தலைவர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியி ட்டுள்ளார்

கடந்த 15.03.2025 அன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேதுரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் தலைமையிலா ன தமிழ் மக்கள் வி டுதலைப் புலிகள் கட்சியும் தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமை த்துள்ளனர் . ஆனால் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செ ய்யப்பட்ட ‘கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின்” அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமி ழர் கூட்டமைப்பு” எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகிய எனது தலைமையில் 2018 இல் உருவாகி அதற்குத் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதத் தொடர்பாடல்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொ ள்ளப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமை ப்பு சார்பில் பத்திரிகைச் செய்திகளும் பத்திரிகை அறிக்கைகளும் தேர்தல் பிரசாரத் துண்டுப் பிரசுரங்களும் கூட வெளியாகியிருந்தன.இந்த விடயங்களெல்லாம் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறி யப்பட்டவையாகவிருந்த போதிலும் கூட மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செ யலாளரும் தமிழர் முற்போக்குக் கழகத்தின் செயலாளரும் ‘கிழக்குத் தமிழர் கூட்டமை ப்பு” எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காக எடுத்தாண்டுள்ளனர்.மேலும் இக்கூட்டுக்கும் எனது தலைமையில் 2018 இல் உருவான ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” க்கும் எந்தச் சம்பந்தமுமில்லையெ ன்பதை பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஏனையோருக்கும் அறியத் தருகின்றேன் என அதில் தெரிவித்துள்ளார்.

ஆக குற்றவாளிகள் கூட்டமைத்துள்ள ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”ம் திருடப்பட்ட ஒரு கூட்டமைப்பாகவே உள்ளது . எனவே விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரங்களையும் பிரதேசவாதத்தினையும் முன்னிலைப்படுத்தும் இந்தக் குற்றவாளிகளின் கூட்டமைப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மிகவும் கவனமாகவும் தமிழ் தேசிய உணர்வோடும் சிந்திக்க வேண்டியது அவசியம்.