தமிழரசு கட்சி நிபந்தனைகள் இன்றி ஆதரவு கோருவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு!
Share
பு.கஜிந்தன்
இலங்கை தமிழரசு கட்சியானது நிபந்தனைகள் இன்றி தமக்கு ஆதரவினை வழங்குமாறு கூறுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1ம் திகதி அ ன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் இறுதியான விடயங்கள் எவையும் எட்டப்படவில்லை. ஆனாலும் ஒருங்கிணைந்து செல்வதற்கு தயாராக இருப்பதாக பல கட்சிகளும் குறிப்பிட்டிருக்கின்றனர். நாங்களும் அவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றோம்.
கொள்கை ரீதியாக உடன்பாட்டுக்கு வருவதற்காக அதுசார்ந்த கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றது. தமிழரசு கட்சியை பொறுத்தவரை அதனுடைய தலைவராக இருக்கக்கூடிய தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது, குறைந்தபட்சம்கூட அவர்களுக்கு எந்தவொரு இடத்தையும் விட்டு கொடுக்க முடியாது. ஆகவே எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி ஆதரவு தெரிவிக்க வேண்டும். மாற்றீடாக நாங்கள் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.
ஆகவே அவர்களைப் பொறுத்தவரையில் எந்தவிதமான கேள்வி நியாயங்கள் இல்லாமல், அவர்கள் கேட்கின்ற ஆதரவுகளை கொடுத்தால் அவர்களுக்கு போதுமானது என்ற கருத்தை தான் அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். ஆனால் அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது கூட்டாக செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றது என்றும், அது தொடர்பான கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றது. அந்த கொள்கை ரீதியான விடயங்களை நாங்கள் அவர்களுடன் பேசி இருக்கின்றோம்.
பேச்சுவார்த்தைகள் என்பன இதுவரை முற்றுப் பெறவில்லை. அந்த பேச்சுவார்த்தைகளானது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் முடிவுக்கு வந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான நிலவரங்கள் தோன்றும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஒரு தெளிந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இந்த சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் எண்ணுகின்றோம் என்றார்.




















