LOADING

Type to search

இந்திய அரசியல்

கரூர் துயரம்: காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை?

Share

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

     கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கரூர் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்விவரம்: 12.45 மணிக்கு கரூரில் விஜய் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேர தாமதமாகத்தான் விஜய் அங்கு வருகை தந்தார். பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர் அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர். கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை. காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.