மகாராஷ்டிராவில் கனமழைக்கு 10 பேர் உயிரிழப்பு
Share
மகாராஷ்டிராவில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். நாசிக் மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3 பேர் வீடு இடிந்து விழுந்ததில் இறந்து உள்ளனர். தாராஷிவ், அகில்யாநகரில் தலா 2 பேர் இறந்துள்ளனர். ஜல்னா மற்றும் யவத்மால் ஆகிய இடங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் 11,800-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர். இந்த கனமழைக்கு காரணமாக மராத்வாடா பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. அங்குள்ள கோதாவரி ஆற்றில் உள்ள ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2.92 லட்சம் கன அடியாக உயர்ந்தது. வெள்ள அபாயம் காரணமாக சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் பகுதியில் இருந்து சுமார் 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.




















