LOADING

Type to search

உலக அரசியல்

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250 பேர் மாயம்

Share

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதி முகாமில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கியுள்ளனர். அங்கு போதிய உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் எதுவுமின்றி அவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. இந்த இக் கட்டான சூழலில், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றால் வாழ்வாதாரம் செழிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள டெக்னாப் என்ற இடத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய விசைப்படகு மலேசியா நோக்கிப் புறப்பட்டது. அந்த படகில் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அந்தமான் கடல் பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது. திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் படகு, கண்ணிமைக்கும் நேரத்தில் நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் அனைவரும் கடலில் விழுந்து அலறினர். அப்போது அந்த வழியாக இந்தோனேசியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் ஊழியர்கள். கடலில் மக்கள் தத்தளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 9 பேரை உயிருடன் மீட்டனர். மாயமான மற்ற 250 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடம் வங்கதேச எல்லைக்கு வெளியே இருப்பதால், முறையான மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.