புதிய அரசு அமைவதில் தாமதம் – நிர்வாக பணிகளை தொடங்கினார் ஆளுனர்
Share
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் முட்டுக்கட்டை மற்றும் திரைமறைவு நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியான நிலையில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் அன்றாடம் நடக்கும் நிர்வாக பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக்கூடாது என நிர்வாக பணிகளை கவனித்து கொள்ளும் பணியை ஆளுனர் அர்லேக்கர் துவங்கி உள்ளார். அதன்படி, ஆளுனரின் உத்தரவின் பேரில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக லோக் பவன் அறிவித்துள்ளது. இது குறித்து லோக்பவன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடனடியாக பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், புதிய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்கும் வரை முடிவுகள் வெளியிடுவதை நிறுத்தி வைப்பது மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை தாமதப்படுத்தும். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி முடிவுகளை தாமதமின்றி வெளியிடுவது அவசியம் என்பதால் ஆளுனர் இவ்வாறு உத்தரவிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.















