சொகுசு கப்பலில் 2 இந்திய ஊழியர்களுக்கு அரிய வகை வைரஸ் தொற்று உறுதி
Share
தென்அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா நோக்கி எம்.வி. ஹோண்டியஸ் என பெயர் கொண்ட டச்சு நாட்டு சொகுசு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் 147 பயணிகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு ஹண்டா எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், கேப் வெர்தே கடலோர பகுதியில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் பாதிப்புகளால், 3 பேர் பலியாகி உள்ளனர். மீதமுள்ள 144 பேர் அச்சமடைந்து உள்ளனர். இது மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்த சாத்தியமுள்ளது என்றும் பரவக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. பரிசோதனையில், 7 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது தெரிய வந்தது. தென் அமெரிக்காவில் பயணிகள் ஏறுவதற்கு முன்பு, வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கும் என நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சொகுசு கப்பலில் இருந்த 2 இந்திய ஊழியர்களுக்கு அரிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதனால் இந்தியாவுக்கு உடனடியாயயயக எந்தவித பாதிப்பும் இல்லை என இந்திய சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்புகள் தெரிவித்து உள்ளன. இந்திய ஊழியர்கள் இருவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனினும், இதில் அச்சப்பட தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா போன்று இது எளிதில் பரவ கூடியது இல்லை என்றும் நீண்ட நேரம் ஒருவருக்கொருவர் நெருங்கி இருக்கும்போது மட்டுமே தொற்று பரவ சாத்தியம் உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.















