ஆண்டனி வர்கீஸ் நடித்த காட்டாளன் படம் மே 28ல் திரையரங்கில் வெளியாகிறது
Share
பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காட்டாளன்’ வனத்தில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை விறுவிறுப்புடன் விவரிக்கிறது. கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான ‘காட்டாளன்’ ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் மே.28ல் வெளியிடுகிறார். பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. “பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும், அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை ஒவ்வொரு நிமிடமும் பரவசத்தில் ஆழ்த்தும்,” என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். ‘காட்டாளன்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பெப்ஸி மற்றும் எகசெட் ஆகிய இரண்டு யானைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. உரிய அனுமதி பெற்று, விலங்குகளை துன்புறுத்தாமல் நிஜ யானைகள் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘கேஜிஎப்’ திரைப்படத்தை தனது இசையால் அதிர வைத்த ரவி பஸ்ரூர் ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க, ரேனா திவே ஒளிப்பதிவு மேற்கொள்ள. ஷமீர் முகம்மது படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. “ஒரு பான் இந்தியா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள ‘காட்டாளன்’ திரைப்படம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்,” என படக்குழுவினர் மேலும் கூறினர்.
















