“பணம் இருப்பவர்களிடத்தில் மனம் இருக்காது, மனம் இருப்பவர்களிடத்தில் பணம் இருக்காது”
Share
முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியில் ‘ஜெயரட்ணம் நுண்கலையகத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் வடக்கு மாகாணஆளுனர் தெரிவிப்பு
இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம், அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work – No problem; More work – More problem) என்ற எண்ணம் உருவாகி வருகின்றது. இதனால், எமது சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளும் நிலை அருகி வருகின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியின் மாணவர்களின் அழகியல் சார் கலைகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட ‘ஜெயரட்ணம் நுண்கலையகம்’ (18.06.2026) வியாழக்கிழமை அன்று காலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நுண்கலையகமானது பெரும் மதிப்பிற்குரிய மருத்துவக் கலாநிதியும் கொடைவள்ளலுமான விமல் ஜெயரட்ணம் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன், ஜெயரட்ணம் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சித்திரம், சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய நான்கு துறைகளுக்கும் தனித்தனியான வகுப்பறைகளை உள்ளடக்கியதாக இரண்டு மாடிகளைக் கொண்டு இந்த நுண்கலையகம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் த.தர்மராஜா அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கொடையாளரான மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. புதிய கட்டடத்தின் பெயர்ப்பலகையை ஆளுநர் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க, கட்டடத்தை மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட மேடை நிகழ்வில், இப்பாடசாலைக்கு கடந்த காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளை அமைத்துக் கொடுத்ததுடன், தற்போது இந்த நுண்கலையகத்தையும் நிர்மாணித்துக் கொடுத்த மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களின் மகத்தான சேவையைப் பாராட்டி, அவருக்கு ‘வாழும் வள்ளல்’ விருது வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து மாணவர்களுக்கு மக்கள் இசையைப் பயிற்றுவித்த பாடகரும் நடிகருமான கருங்குயில் அவர்களால், மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களை வாழ்த்தி உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடலொன்றும் மாணவர்களால் இதன்போது இசைக்கப்பட்டது.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள்,
‘ஒரு பாடசாலைக்கு அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சமூகம் உதவி செய்வதுதான் வழமை. ஆனால், இந்தப் பாடசாலைக்கு விடுதிக் கட்டடங்கள் மற்றும் நுண்கலையகம் என்பவற்றை அமைத்துக் கொடுத்த விமல் ஜெயரட்ணம் அவர்களுக்கும், இந்தப் பாடசாலைக்கும், ஏன் இந்த மாவட்டத்துக்கும் கூட எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனாலும் அவர் தனது சொந்த வீட்டைக்கூட விற்று இந்த மிகப் பெரிய உதவிகளைச் செய்திருக்கின்றார். பணம் இருப்பவர்களிடத்தில் மனம் இருக்காது, மனம் இருப்பவர்களிடத்தில் பணம் இருக்காது என்று சொல்வார்கள். ஆனால், விமல் ஜெயரட்ணம் அவர்களிடம் அவை இரண்டும் நிறைந்திருக்கின்றது. அவரது தியாகத்தைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே போதாது.
தனது உரையில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்ட மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் யேசுதானந்தன் அவர்களால்தான் தான் இங்கே இவ்வளவு விடயங்களையும் செய்ததாகக் கூறினார். அது முற்றிலும் உண்மை. முன்னாள் அதிபர் யேசுதானந்தன் மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை இந்தப் பாடசாலைக்கு வழங்கியிருந்தார். அவர் அன்று ‘இந்த மேலதிக வேலைகள் எனக்கேன்?’ என்று எண்ணியிருந்தால், இந்தப் பெரிய திட்டங்கள் பாடசாலைக்குக் கிடைத்திருக்காது. அதனால்தான், எல்லாமே ‘தலைமைத்துவத்தில்’ தான் தங்கியிருக்கின்றது என நான் பல தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றேன்.
எமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் வீணான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற எண்ணம் அதிகாரிகளிடத்தில் அதிகரித்து வருகின்றமையால், மக்கள் அடைய வேண்டிய பல நன்மைகள் அவர்களைச் சென்றடைவதில்லை.
எனவே, மாணவர்களாகிய உங்களைச் சிறந்த தலைமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று நான் வலியுறுத்துகின்றேன். வெறும் புத்தகப் புழுக்களாக மாத்திரம் இருந்துவிடாமல், இந்தச் சமூகத்துக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக உங்களை நீங்களே வளர்த்தெடுக்க வேண்டும். சமூகத்துக்கு உதவி செய்பவர்களைத் தான் இந்தச் சமூகம் என்றும் மதிக்கும். எத்தகைய உயர் பதவிகளில் இருந்தாலும், சமூகத்துக்காக உழைக்காவிட்டால் அந்தப் பதவியால் எவ்விதப் பயனும் இல்லை. இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நுண்கலையகமும், உங்களைப் படிப்புடன் மாத்திரம் சுருக்கிவிடாது இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் உங்களது ஆற்றல்களை வெளிக்கொணரப் பெரிதும் உதவும், எனத் தெரிவித்தார்.
















