LOADING

Type to search

மலேசிய அரசியல்

ஒற்றரையே ஓட்டுநராக வைத்திருந்தவர் பத்திரிகை ஆசிரியராக மாறிய பள்ளி ஆசிரியர் – சிம்மக்குரலோன் பி.பட்டு

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், ஜூலை 12:

மலேசியத் தமிழர்களின் அரசியல்-கல்வி-சமூக-பொருளாதார உரிமைகளுக்காக சளைக்காமல் குரல் கொடுத்த பி.பட்டுவின் பெயர், மலேசிய அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவருக்கு 2021 ஜூலை 12, 26-ஆவது நினைவு நாள்.

பிள்ளைப் பூச்சியை, தன்னை அறியாமலேயே மடியில் கட்டிக் கொண்டு வாழ்ந்தார் ஓர் அரசியல் தலைவர்; நாடாளுமன்றத்தில் சிங்கமென கர்ஜனை புரிந்த பி.பட்டுதான் அவர்.

மலேசிய அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தின் ஒற்றர் என்பதை அறியாமலேயே அவரை தன் ஓட்டுநராக அமர்த்திக் கொண்ட அரசியல் தலைவர் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

நாடாளுமன்றப் பணி, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு, ஜனநாயக அரசியல் கட்சி(ஜசெக)யின் பரபரப்புமிக்க தேசிய செயலாளர் பதவி, கட்சியின் மாத ஏடான ரோக்கட்-இன் ஆசிரியர் என்றெல்லாம் அதிகமான பொறுப்புகளை சுமந்ததால் அவருக்கு வாகன ஓட்டுநர் தேவை என்பதை உணர்ந்த ஜசெக தேசிய தலைமை அதற்கு ஒப்புதல் அளித்தது.

இதை, வகையாக மோப்பம் பிடித்துவிட்ட அன்றைய மத்தியக் கூட்டரசின் உளவுப் பிரிவு, சாமர்த்தியத்திலும் நடிப்பிலும் கைதேர்ந்த தன் உறுப்பினர்களில் ஒருவரை பட்டுவிடம் ஓட்டுநர் வேலை கேட்டு அனுப்பியது. சம்பந்தப்பட்ட அதிகாரியின் பணிவு, காலம் கருதாத பணி, உறுதுணை, ஒத்திசைவான அணுகுமுறை உள்ளிட்ட அனைத்தையும் நம்பி அவரை நம்பிக்கைக்கு உரிய ஒட்டுநராகவேக் கருதி தன்னுடைய அரசியல்-வாழ்க்கைப் பயணத்தில் இணைத்துக் கொண்டுள்ளார், பட்டு.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கெமுந்திங் தடுப்பு முகாமில் இருந்தபொழுது, அவரிடம் ஒட்டுநராக இருந்தவர் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து அங்கு நடமாடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாராம் பட்டு.

மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா-விற்கு அடுத்து மலேசியவாழ் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகமாக உறுப்பியம் பெற்றுள்ள கட்சிகளில் ஜசெக, குறிப்பிடத்தக்கது. மலையகத்திற்கு சுதந்திரம் கிடைத்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கப்பட்ட ஜசெக, அடுத்த நான்கு ஆண்டுகளிலேயே மிகப்பெரிய ஜனநாயக வெற்றியை எட்டியது.

1969-இல் நடைப்பெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் அக்கட்சிக்கு பதின்மூன்று இடங்களை அள்ளித் தந்தனர். தேர்தல் களம் கண்ட முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்ற ஜசெக, ஊக்கமும் அதன்வழி ஆக்கமும் பெற்றுத் திகழ்ந்தது.

சமதரும மக்களாட்சி, ஜனநாயக சமுதாயம், சமூக நீதி – ஆகிய மூன்று கொள்கைகளை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் சின்னமான செவ்வண்ண ஏவுகணை, ‘புதுமை-பொலிவு-முற்போக்கு’ என்னும் முச்சிந்தனையை உள்ளடக்கியது. ஏவுகணையின் அடிப்பகுதியில் உந்து ஆற்றலாக குறிப்பிடப்படும் நான்கு அடையாளங்களும் கட்சிக்கு ஆதாரமாக விளங்குகின்ற மலாயர்கள், சீனர்கள், இந்தியர்களுடன் மற்ற இனத்தவரையும் குறிப்பிடுகின்றன.

இப்படிப்பட்ட ஜசெக-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட பட்டு, தேக்கு மரம் தேக்கி வைத்திருக்கும் உறுதியைவிட மனவுறுதியைக் கொண்டிருந்தார். தன் உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்காக ஈகம் செய்த அவர், ஜசெக-வில் இணைந்த குறுகிய காலத்திலேயே கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.

ஜசெக-வின் மாத ஆங்கில இதழான ‘ரோக்கெட்’டின் ஆசிரியராக விளங்கிய பட்டு, 1978-இல் ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். மீண்டும் 1987-இல் ‘ஓப்ராசி லாலாங்’ என்ற நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டு கெமுந்திங் தடுப்பு முகாமில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

மலாய், ஆங்கிலம், தமிழ் மொழிகளுடன் சீன மொழியில் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்த பட்டு, பேராக் மாநில சட்டமன்றத்திற்கு கோப்பெங் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982-இல் மெங்கெளும்பு(பேராக்) தொகுதியில் இருந்தும் 1986-இல் பாகான்(பினாங்கு) தொகுதியிலிருந்தும் நாடாளுமனறத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1990-இல் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் துன் ச.சாமிவேலுவை எதிர்த்து களம் கண்ட பட்டு வெற்றிக்கோட்டை எட்டாமல் போனார்; இதற்கு முன், 1974 பொதுத்தேர்தலிலும் சாமிவேலுவை அதே சுங்கை சிப்புட்டில் சந்தித்தார். அப்போது, சாமிவேலுவிற்கு மிக அருகில் வந்து வெறும் 644 வாக்குகள் வேறுபாட்டில் தோல்வி கண்டார் பட்டு.

1971-இல் ஜசெக-வில் இணைந்த பட்டு, தன் ஆசிரியர் தொழிலை தொடர்ந்து வந்தார். ஆனாலும், அரசியல் பணி பலுவினால் 1973-இல் அப்பணியில் இருந்து விலகி, முழுநேர அரசியல்வாதி ஆனார்.

பட்டு, தன் அரசியல் பயணத்தில் தேர்தல் களத்தில் கண்ட வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு, அடுத்தக்கட்டத்திற்கு நகரும் தன்மையைக் கொண்டிருந்தார். காலமெல்லாம் கட்சி-தொண்டு என்றே சுழன்று வந்த பட்டு, இடையிடையே கடுமையான சிறைவாசத்தையும் எதிர்கொள்ள நேர்ந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டடு, 1995 ஜூலை 12-இல் தன் வாழ்க்கைப் பயணம்-அரசியல் பயணம் இரண்டையும் ஒருசேர நிறுத்திக் கொண்டார்.

நலிந்த மக்களின்பால் கரிசனம் கொண்டிருந்த பட்டு 48 வயதிலேயே மறைய நேரிட்டது துயரமானதுதான். குறிப்பாக, அவர் பெரிதும் விரும்பிய அரசியல் மாற்றம், ஜனநாயக மறுமலர்ச்சி எதையும் காணாமல் மறைந்த பட்டுவிற்கு இந்த ஜூலை 12, 26-ஆவது நினைவு நாள்.

பட்டுவின் மூத்த மகள் கஸ்தூரி, அவரின் அரசியல் வாரிசாக நீடிக்கிறார்.

இன்றைய நாளில், அப்பாவைப் பற்றிய எண்ணமெல்லாம் மனம் முழுக்க நிறைந்துள்ளது என்று சொன்ன கஸ்துரி, மலேசிய நாடாளுமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேத் தமிழ்ப் பெண் ஆவார்.

“அரசியல் பள்ளியில் என் தந்தை எனக்கு வகுப்பாசிரியர் என்றால், லிம் கிட் சியாங் தலைமை ஆசிரியர். என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம்; நான் சுவாசிக்கும் காற்று அரசியல் காற்று; என் மனம் முழுக்க அரசியல் சிந்தனை. எனவே, என் தந்தை வகுத்துத் தந்த பாதையில் என் அரசியல் பேராசான் லிம் கிட் சியாங் வழிகாட்டுதலில் என் அரசியல் பயணமும் வாழ்க்கையும் ஒருசேரத் தொடர்கிறது” என்று மேலும் குறிப்பிட்டார் கஸ்தூரி.

பினாங்கில் பட்டுவின் பெயரில் ஒரு சாலை உள்ளது. செபராங் பிறை பட்டர்வொர்த்தில் ஜாலான் மாக் மண்டினையும் லோரோங் பூங்கா தஞ்சோங்-7ஐயும் இணைக்கும் ஜாலான் பட்டுவை 2011 ஜூலை 31-ஆம் நாளில் பினாங்கின்அப்போதைய முதல்வர் லிம் குவான் எங் தொடக்கி வைத்தார்.