LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசியாவில் அண்ணா – 112ஆவது பிறந்த நாள் நினைவுகள்

Share

சோறு என்று சொன்னதற்காக வீட்டில் ‘திட்டு’ வாங்கிய மலேசியத் தலைவர்

திராவிட இயக்கத் தலைவர்களின் விமர்சனத்திற்கு ஆளான துன் சம்பந்தன்

அறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம்

(அறிஞர் அண்ணாவுக்கு 2021 செப்.15, 112-ஆவது பிறந்த நாள்)

நக்கீரன்

நக்கீரன் – Nakkeeran 013-244 36 24
கோலாலம்பூர், செப்.15:

அரசியல் மேடைகளில் மெல்லிய தென்றல் வீசுவதைப் போன்று திகழ்ந்த பேரறிஞர் அண்ணா இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்காவது வாழ்ந்திருந்தால் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்தே ஒரு வழிகாட்டுத் தலைவராக விளங்கி இருப்பார். அத்துடன் வட இந்திய தலைவர்களே பாராட்டும் தென்னிந்தியத் தலைவராக உருமாறி இருப்பார்; உயர்ந்திருப்பார் என்று தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவரும் ஐநா மன்றத்தில் மலேசியப் பிரதிநிதியாக செயல்பட்டவருமான டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள், அறிஞர் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் தமிழக முதல்வரான பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அறிஞர் அண்ணாவையும் உடனிருந்த கே.ஏ. மதியழகனையும் அங்கு சந்தித்த விவரத்தை டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அவர்கள் பகிர்ந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது.

1967 மார்ச் 6-ஆம் நாளில் முதல்வராக பதவியேற்ற அண்ணா, அதற்கு ஏறக்குறைய ஈராண்டுகளுக்கு முன் மலேசியாவிற்கு வருகை தந்தபோது, மலேசியவாழ் தமிழ்ச் சமூகத்திலும் அரசியல் வட்டத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின.

அந்த நேரத்தில் பொதுப்பணி-அஞ்சல் துறை அமைச்சராக இருந்த துன் வீ.தி. சம்பந்தனார், இந்திய சமுதாயத்தை குறிப்பாக மலேசியத் தமிழர்களை அரசாங்கத்தில் பிரதிநிதித்த ஒரு தேசியவாதியாகவும் காங்கிரஸ் இயக்கவாதியாகவும் விளங்கினார். அதனாலோ என்னவோ அறிஞர் அண்ணாவை கடைசிவரை அரசியல் எதிரணிக்காரராகவே கருதிவிட்டார்.

ஒரு கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் மேன்மையையும் அரசியல் எல்லையைக் கடந்த அவரின் பன்முகப் பாங்கையும் தமிழ் இனத்திற்காகவும் மொழிக்காவும் அவர் பாடாற்றிய விதத்தையும் எண்ணிப்பார்த்த துன் சம்பந்தன், அண்ணாவின்மீது பற்றுகொள்ளத் தொடங்கினார். ஆனால், அந்த வேளையில் அண்ணா உயிருடன் இல்லை.

தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் காங்கிரசிற்கு எதிராக அண்ணா அரசியல் புரிந்தார் என்பது உண்மைதான். அதற்காக, மலேசிய இந்தியர் காங்கிரசும் அறிஞர் அண்ணாவுடன் அரசியல் பகைமை கொண்டிருக்கத் தேவை இல்லை. அண்ணா ஜவஹர்லால் நேருவையே எதிர்த்தார் என்பதற்காக அதே நேருவால் தொடங்கி வைக்கப்பட்ட மலேசிய இந்தியர் காங்கிரஸ் இயக்கத்தை வழிநடத்திய துன் சம்பந்தனும் அண்ணாவை ஏற்காமல் இருந்தார் என்பது உண்மைதான்.

அதனால்தான், அவர் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டிருந்த சமயத்தில் துன் சம்பந்தன் அவரைப் புறக்கணித்தார் என்று அந்த காலக்கட்டத்தில் அவதானிக்கப்பட்டது. குறிப்பாக ‘ஸ்டேடியாம் நெகாரா’வில் அண்ணா கலந்து கொண்டு ஆங்கில உரை ஆற்றுவார்; அதில் துன் சம்பந்தனார் கலந்து கொண்டு தலைமை தாங்குவார் என்றெல்லாம் அறிவிப்பு செய்திருந்த நிலையில் கடைசியில் துன் சம்பந்தனுக்குப் பதிலாக ம.இ.கா. துணைத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி சிறப்பாக இருந்தாலும், அண்ணாவை சம்பந்தன் அலட்சியப்படுத்தி விட்டார் என்று அந்நாட்களில் எழுச்சியுடன் திகழ்ந்த மலேசியத் திராவிடர்க் கழகத்தினருக்கு சம்பந்தன்மிது வருத்தமும் கோபமும் எழுந்தன என்றும் மலாக்காவில் அரசுமுறை நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் அண்ணாவின் நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனதாக சம்பந்தனார் தரப்பில் பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இதன் தொடர்பில் மலேசிய திராவிய இயக்க மூத்தத் தலைவர் இரெ.சு. முத்தையா தெரிவித்தார்.

இத்தகைய அரசியல் மாச்சரியம், சங்கடத்தைத் தவிர பொதுவாக மலேசியத் தமிழர்கள் அண்ணாவை தேசிய அளவில் கொண்டாடி குதூகலித்தனர்.

அப்பொழுது, மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் அரசியல் ரீதியான பிணக்கு நிலவியது. மலேசிய தேசிய பாதுகாப்பு நிதியும் திரட்டப்பட்ட நேரம் அது. இந்த நிதிக்கு மலேசியத் தமிழர்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என்று பினாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்டுக் கொண்டார் அண்ணா.

தமிழகத்துடன் கலாச்சார-பண்பாட்டுத் தொடர்பை மட்டும் தற்காத்துக் கொண்டு இந்த மண்தான் உங்களுக்கெல்லாம் தாயகபூமி என்ற உணர்வுடன் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு இங்கேயே வாழ வேண்டும் என்று அண்ணா வெளிப்படுத்திய தேசிய சிந்தனை யெல்லாம் துன் சம்பந்தனாரின் காதுகளை அப்போது எட்டவில்லை.

அண்ண கலந்து கொண்ட பினாங்குக் கூட்டத்தில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக, கோலாலம்பூர்க் கூட்டத்தில் அண்ணா ஆங்கிலத்தில் பேசினார் என்பதை அறிந்த பினாங்குவாழ் தமிழர்களும் அண்ணாவின் ஆங்கிலப் பேச்சைக் கேட்க ஆர்வம் தெரிவித்தனராம். இதைப் பொருட்படுத்தாத அண்ணா தமிழிலேயே பேசிக் கொண்டிருக்க, ஆங்கிலத்தில் பேசும்படி இடையிடையே குறுக்கீடுகள் தொடர்ந்த நிலையில், கோலாலம்பூர் உங்கள் நாட்டின் தலைநகரம்; அங்கு நடைபெற்றக் கூட்டத்தில் தமிழை அறியாதவர்களும் கலந்து கொண்டதால் ஆங்கிலத்தின் பேச வேண்டிய தேவை எழுந்தது.

இங்கு அந்த நிலை இல்லை; பேசும் நானும் சரி, கேட்கும் நீங்களும் சரி அனைவருமே தமிழர் என்பதால், இங்கு ஏன் ஆங்கிலம் என்று நயமாகக் கேட்டு தமிழிலேயே தன் உரையைத் தொடர்ந்தாராம் அண்ணா!

பேரறிஞர் அண்ணா மறைந்தபோது, 1969 பிப்ரவரி 4-ஆம் நாள் வெளிவந்த தமிழ் நாளேட்டின் அத்தனைப் பக்கங்களும் அண்ணாவைப் பற்றிய செய்திகளையே தாங்கி வந்ததால், இது குறித்த தகவல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் வரை சென்றதாகவும் துன் சம்பந்தனிடம் விளக்கம் கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இயக்க மறுமலர்ச்சி தொடங்கிய காலத்திலிருந்தே தமிழும் எழுச்சிபெறத் தொடர்ந்தது. அதற்கேற்ப ஏராளமான பருவ இதழ்கள் அங்கு வெளிவரத் தொடங்கின. அதன் தாக்கம் மலேசியாவிலும் எதிரொலித்தது.

இப்படிப்பட்ட நிலையில் அண்ணா வருகையின்போது தமிழ் எழுச்சி இன்னும் ஏகமாக எழுந்தது. நல்ல தமிழில் பேச வேண்டும் என்ற உணர்வு அன்றைய தலைவர்களிடமும் பொதுவாக அனைவரிடமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட தாக்கத்திற்கு ஆளான டான்ஸ்ரீ க. குமரன், உண்மையிலேயே குமரனாக இருந்தபொழுது வீட்டில் ‘சோறு’ என்று சொல்லி சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

இதைக் கண்டு சினம் கொண்ட அவரின் பாட்டி, இத்தனைக் காலமும் சாதம் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது என்ன புதிதாக சோறு என்கிறாய் என்று கடிந்து கொண்டாராம். அண்ணா அவர்கள், மலேசியத் தமிழர்களிடம் எத்தகைய தாக்கத்தை யெல்லாம் ஏற்படுத்தினார் என்று ஏராளமான விவரத்தைப் பகிர்ந்து கொண்டார் அந்த மூத்த அரசியல்-சமூகத் தலைவர்.

பத்திரிகையாளர், இதழாளர், ‘ஹோம் லேண்ட்’ என்னும் ஆங்கில இதழாசிரியர், பள்ளி ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை ஆசிரியர், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர் என்றெல்லாம் எத்தனையோ வடிவங்களை அண்ணா தன் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றிருந்தாலும் அவரின் உரையும் அடுக்குமொழி நடையும்தான் உலகளாவியத் தமிழர்களை அவரின்பால் ஈர்த்தன.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ ‘டாக்டர்’ பட்டத்தைப் பெற்ற அமெரிக்கர் அல்லாத ஒரேத் தலைவர் அறிஞர் அண்ணா என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாவைப் பற்றி சொல்ல முனைந்தால் எண்ண மெல்லாம் விண்ணக அளவிற்கு விரியும்.

எது எவ்வாறாக இருந்தாலும், மறைந்து 52 ஆண்டுகள் ஆன நிலையிலும் அண்ணாவைப் பற்றிய சிந்தனை உலகத் தமிழர்தம் நெஞ்சங்களில் பதிந்து இருக்கிறதென்றால, அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி.

பிரதமர் ஆன நிலையிலும் புத்தகப் புழுவாகவே வாழ்வைத் தொடர்ந்த நேரு, ஒரு கட்டத்தில் அண்ணாவை வெறுத்தார்; எதிர்த்தார் என்பதெல்லாம் உண்மைதான் எனினும் பின்னாளில் அதே நேரு அண்ணாவை வெகுவாகப் பாராட்டியதுடன் வியந்தும் புகழ்ந்தார்.

அண்ணா, தன்னைவிட பெரும் புத்தகப்புழுவாக இருக்கிறாரே என்று பளிச்சென சொன்னாராம் நேரு.

அப்படிப்பட்ட புத்தகப் புழுவான அண்ணா, ஒரு நாளில்கூட விடியலைக் கண்டதில்லை. பொடி உறிஞ்சிய மூக்கோடு நள்ளிரவைத் தாண்டியும் சில நாட்களில் வெள்ளி முளைக்கும் வேளையிலும் உறங்கச் சென்ற அண்ணா, தமிழினத்தின் விடியலுக்காக அயராது பாடாற்றினார் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.