LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் பிக்குகள் அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தை எரிக்கவில்லை- அவர்கள் எரித்தது பௌத்தத்தையே! – மா.சக்திவேல்

Share

மன்னார் நிருபர்

(10-02-2023)

இலங்கையில் அண்மையில் பௌத்த பிக்குகள் அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தை எரிக்கவில்லை. அவர்கள் எரித்தது பௌத்தத்தையே என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சக்திவேல்- வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிக்குகள் பேரணி நடத்தி அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தை வீதியில் எரித்திருக்கின்றார்கள். அவர்கள் எரித்தது பௌத்தத்தையே.

பிக்குகளின் அரசியலுக்கு பின்னால் உள்ள அரசியல் சக்தியே அதற்கு காரணமாகும். ராஜீவ் காந்தி-ஜே.ஆர் ஒப்பந்தத்தை 36 வருடங்களுக்கு முன்னரே தமிழர்கள் தமது அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை.

13 ஆம் திருத்தத்துடன் உருவான மாகாண சபையையும் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் அதனை தீர்வாக முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கும் எவரும் ஆயத்தம் இல்லை.
கொழும்பு அரசியல்வாதியான மனோ கணேசன் மட்டுமே இது அரசியல் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளி என கூறிக்கொண்டிருக்கின்றார்.

இத்தகைய சூழ்நிலையில் ரணில் 13 என்று கூறுவதும், பிக்குகள் அதனை பேரணியாக வந்து எரிப்பதும் அரசியல் நாடகமே அன்றி வேறில்லை.

இந்த 13 ஐ எரித்தல் அரசியலுக்குப் பின்னால்,சீன சார்பு குழுவினரின் ஆதரவோடும், இந்திய மற்றும் மேற்குலக சார்பு ஆதரவோடுமே ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் நிலையில், பூனைக்கு வாலும் எலிக்கு தலையை காட்டுகின்ற பாம்பின் செயற்பாடு இருக்கின்றது.

இந்தியாவையும், தமிழர்களையும் சமாளிப்தற்கு13 என்றும், சீனாவை தம்வசம் வைத்திருக்க பிக்குகள் பேரணி ஒருங்கே கையாளப்படுகிறது.

தமிழர்கள் ஏமாந்து விடக் கூடாது. ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு பின்னால் நிற்பது அரசியல் சுய லாபம் கருதியே.

இத்தகைய சூழலில் ரணில் ஜனாதிபதி தேர்தலை நோக்கி காய் நகர்த்துவதையும் உணரக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி “நான் நாட்டை பிரிக்க மாட்டேன். சமஷ்டி இல்லை. ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு” எனக் கூறுவதை நாம் அவதானிக்கலாம்.

சிங்கள பௌத்த வாக்குகளின் சொந்தக்காரர்கள் பக்கமாக நின்று அரசியல் செய்யும் தலைமையின் கீழ் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை.

இந்தப் பின்னணியில் சிங்கள பௌத்த வாக்குகளின் உரிமையாளர்கள் பேரணியை கொழும்பு நோக்கி நகர்த்தி உள்ளனர். தமிழர்கள் பௌத்தத்தை மதிக்கின்றார்கள்.

“அனைத்து உயிர்களும் துக்கமற்று இருப்பதாக, அனைத்து உயிர்களும் நலமாய் இருப்பதாக, அனைத்து உயிர்களும் நோயற்று இருப்பதாக” என்பதே பௌத்த கோட்பாடு. ஆனால் ஒரு சில பிக்குகளின் அரசியல் அதுவல்ல.

பிக்குகளின் அரசியல் என்பது கொலையும் செய்யும் என்பதற்கு எஸ்.டபிள்யு.பண்டார நாயக்கவின் கொலை நல்ல உதாரணம்.

அதேபோல் அது தீயோடும் விளையாடும் என்பதற்கு இறுதி உதாரணமே 13 தீயிட்டு கொளுத்தியமை. 75 ஆண்டு காலமாக தீர்வு சிங்கள பௌத்த அரசியலாலும் பிக்குகளின் அரசியலாலும் சுதந்திரம் சாம்பலாகி உள்ளது.”என கூறியுள்ளார்.