LOADING

Type to search

இலங்கை அரசியல்

”இனப்படுகொலையின் முக்கிய சாட்சி மண்டைதீவு கிணறு”

Share

எமது யாழ் செய்தியாளர்

இனப்படுகொலையின் முக்கிய சாட்சியமாக மண்டைதீவு கிணறு காணப்படுவதாகவும் அவற்றினை ஆய்வுக்குட்படுத்தினால் இனப்படுகொலை சாட்சியங்கள் வெளியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ். வேலணைப் பிரதேச செயளாளர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 29 குடும்பங்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து வெலுசுமண கடற்படை முகாம் அமைப்பதற்கான காணி அளவீடு மற்றும் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி புதன்கிழமை (12) தினம் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது இந்த போராட்டத்தில் பலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”இந்த வெலுசுமண கடற்படை முகாமுக்கு வழங்குவதற்காக பொது மக்களின் காணியை அளக்க முயற்சிக்கப்படுவதனாலேயே இங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்”. கடந்த 33 ஆண்டுகளாக அந்தப் பகுதி இராணுவம் வலிந்து கைப்பற்றி விடுவிக்காமல் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

”மண்டைதீவு கிழக்கிலுள்ள இப்பிரதேசமானது சிறந்த மண் வளத்துடன் நீர் வளத்தையும் உடைய செழிப்பான விவசாய நிலமாகும். இந்த நிலத்தை 1990 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆக்கிரமித்துள்ள இராணுவம் இன்று வரை அகலாதுள்ளனர்”.

வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு முன்னாலுள்ள கிணற்றினுள் புதைக்கப்பட்டு இன்றும் எலும்புக் கூடுகளாக உள்ளனர் என்றார் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.

இவற்றை ஆய்வு செய்யும்படி வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நாடாளுமன்றத்தில் கோரிய போதும் இதுவரை எதுவுமே நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

”கடற்படை இவ்விடத்தைவிட்டு செல்லுமிடத்து இவ்விடம் ஆய்வுக்குட்படுத்தப்படின் இனப்படுகொல சாட்சியங்கள் இங்கே வெளியாகும் என்பதால் கடற்படை தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு அரசும் தொடர்ந்து ஆதரவளிக்கின்றது”.

இவ்விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் கூடுதல் கவனமெடுத்து இங்குள்ள புதைகுழிகளைத் தோண்டவேண்டும் என்பதுடன் தற்போது 18 ஏக்கரென நில அளவைத்திணைக்களம் குறிப்பிட்டாலும் இங்கே 40ற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஆகவே காலங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்த இந்த பூர்வீக நிலங்களை மீளவும் உரியவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரினார்.