LOADING

Type to search

இலங்கை அரசியல்

குருந்தூர் மலையில் பொங்கலுக்கு மூட்டிய தீயை சப்பாத்து காலால் அணைத்த பொலிஸ் அதிகாரி – அனைவரும் ஒன்றுபட்டு மீட்க வேண்டும் என்கிறார் சித்தார்த்தன் எம்.பி

Share

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையிலும் கூட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிசார், பிக்கு ஒருவர் ஆகியோர் பொங்கல் செய்யும் இடத்திற்கு வந்து நிகழ்வினை குழப்புகின்றார்கள். ஒருவர் இதற்கென்று விளம்பரங்கள் கொடுத்து சிங்கள மக்களை அழைத்து வந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் குருந்தூர் மலைக்கு சென்று பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட இடையூறு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அடுப்பினை கற்பூரத்தை வைத்து மூட்டுகின்ற போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தனது சப்பாத்து காலினால் அந்த கற்பூரத்தினை அணைத்துள்ளார்.

முன்னர் இந்த நாட்டிலே இது ஒரு மொழி பிரச்சினையாக இருந்தது, தற்போது மதப் பிரச்சினையாக மாறிக் கொண்டு வரும் நிலையை இவர்கள் உருவாக்குகின்றார்கள். இவர்கள் இதனை வேண்டுமென்றே உருவாக்குகின்றார்கள் எனத்தான் நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால் இந்த நாட்டில் அமைதி இருக்கக் கூடாது, இந்த நாட்டில் பௌத்த கலாச்சாரங்கள் தான் இருக்கின்றது என எனக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே நாங்கள் எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்து இவைகளை நிறுத்துவதற்கு முயல்வோம்.

இந்தப் பகுதிகள் முழுமையாக அவர்கள் ஆக்கிரமிக்க கூடிய நடவடிக்கைகளை தடுப்பதற்காக ஊர் மக்களுடன் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றோம். ஆகவே நாங்கள் அனைவரும் முழுமையாக இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் நினைக்கின்றேன் ஒரே ஒரு சாத்வீகமான வழி தான் தற்போது இருக்கின்ற வழி. அந்த வழியிலே நாங்கள் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இதை மீண்டும் தமிழ் சைவ மக்களுடைய ஆலயமாக மாற்ற வேண்டும் – என்றார்.