LOADING

Type to search

இலங்கை அரசியல்

எமது மகளான வைசாலியின், இடது கைகையை அகற்றியமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெற்றோரால் கோரப்பட்டுள்ளது

Share

எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ
நிராகரிப்புக்களினால் உயிர் இழப்புக்கள் அவய இழப்புக்கள் ஏற்படா வண்ணம் எங்களுடைய
சமூகத்தை பாதுகாக்கும்படி பாதிக்கப்பட்ட எங்களது குழந்தையின் சார்பில் வேண்டி நிற்கின்றோம்.

பு.கஜிந்தன்

எட்டு வயதான சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோரால் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் கடிதத்தின் பிரதிகளை சுகாதார அமைச்சு, வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்புகளுக்கும் அனுப்பபட்டுள்ளது.

அக்கடிதத்தில்,எமது மகளான எட்டு வயதுடைய சாண்டில்யன் வைசாலியின், இடது கை மருத்துவ நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தனின் குழந்தைநல விடுதியில் தங்கி சிகிச்சை பெற்றபோது 12ஆம் விடுதியைச் சேர்ந்த வைத்திய நிபுணர், வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் வேண்டுமென்ற பிழையான செயலின் விளைவாக அதாவது 02.09.2023 ஆம் திகதியன்று மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

இது தொடர்பான விரிவான விடயங்கள் பின்வருமாறு:

எமது மகளான சாண்டில்யன் வைசாலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக நாம் எமது குழந்தையை வண்ணை மேற்கு வைத்தியசாலையில் (கெங்காதரன் Hospital) இல் 23.08.2023 அன்று வைத்திய ஆலோசனைக்காக குழந்தை நலமருத்துவ நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தனிடம் காட்டினோம்.

காய்ச்சல் குறையாமையினால் 24.08.2023 அன்றும் வண்ணை மேற்கு வைத்தியசாலையில் (கெங்காதரன் Hospital) இல் வைத்திய ஆலோசனைக்காக குழந்தையைக் காட்டினோம்.

அங்கு வழங்கப்பட்ட ஆலோசனையின்படி; தனியார் வைத்தியசாலையான Northern Hospital இல் 24.08.2023 ஆம் திகதியன்று குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களின் சிகிச்சைக்காக Northern Hospital இன் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

24.08.2023 மற்றும் 25.08.2023 ஆகிய இரு நாட்களும் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் நோய்நிலையின் தன்மை அதிகரித்தமையாலும் கூடுதல் பராமரிப்புக்காகவும் குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் 25.08.2023 ஆம் திகதியன்று இரவு எமது மகள் Northern Hospital இலிருந்து மாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களுக்குரிய 12ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

தனியார் வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குழந்தைவைத்திய நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே நடைபெற்றது. Northern Hospital இல் Canula வைசாலியின் வலது கையில் மணிக்கட்டின் வெளிப்புறத்தில் இடப்பட்டு குறித்த Canula ஊடாக மருந்து ஏற்றப்பட்டிருந்தது.

Northern Hospital இல் Canula வலது கையில் இடப்பட்டிருக்கையிலும் மருந்து ஏற்றப்பட்டபோதும் எவ்வித பிரச்சனையும் இருக்கவில்லை.

இதன்பின்னர் யாழ் போதனா வைத்தியசாலை 12ஆம் விடுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு ழேசவாநசn ர்ழளிவையட இல் போடப்பட்ட உயரெடய ஊடாகவே மருந்து ஏற்றப்பட்டது.  பின்னர் அடுத்த நாள் 26.08.2023 ஆம் திகதி சனிக்கிழமை காலை அவருக்கு இடது கையின் மணிக்கட்டின் உட்பகுதியில் உயரெடய பொருத்தப்பட்டது.

Canula மூடியை திறந்து மருந்து ஏற்ற முயற்சித்த ஒவ்வொரு வேளையிலும் இரத்தம் பாய்ந்து நிலத்தில் சிதறியது. இது தொடர்பில் தாயாரான எனக்கு சந்தேகம் இருந்தமையினால் கடமையில் இருந்த வைத்தியரிடம் (HO) இதைக்கூறிய போது அது வழமை என எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

சனிக்கிழமை காலையிலிருந்து Saline இல் மருந்து கலக்கப்பட்டு குறித்த இடது கையில் போடப்பட்ட Canula வழியாக ஏற்றப்பட்டு வந்தது.

இதன்பின்னர் 27.08.2023 ஆம் திகதியன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை எமது மகள் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவு 12.00 மணிக்குச் செலுத்தப்படவேண்டிய Clindamycin என்ற மருந்தினை குறித்த 12 ஆம் விடுதியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவு 11.45 மணிக்கு Saline உடன் கலக்காது ஊசி மூலம் Canula இனுள் நேரடியாக செலுத்தினார்.

மேற்குறித்தவாறு மருந்து நேரடியாக Canula ஊடாக ஏற்றப்பட்டவுடன் உறங்கிக் கொண்டிருந்த எமது மகள் விழித்து எழுந்து வலியால் துடிக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து மகளுடன் இருந்த நான் (சாண்டில்யன் சர்மிளா) அங்கு கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர் Antibiotic மருந்தின் தன்மையால் அப்படித்தான் இருக்கும் என்று கூறிவிட்டார்.

தொடர்ந்தும் மகள் வலியால் துடித்தவண்ணம் இருந்ததால் மீண்டும் நான் விடுதியிலுள்ள தாதியர் நிலையத்துக்குச் சென்று அறிவித்ததையிட்டு முதலில் நான் கூறிய தாதிய உத்தியோகத்தரும் மருந்தினை ஏற்றிய தாதிய உத்தியோகத்தரும் வந்து மகளைப் பார்வையிட்டனர்.

இரு தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து தனியே Saline மட்டும் Canula ஊடாக ஏற்ற முயற்சித்த போதும் வெறும் Saline இனைக் கூட அந்தக்கையில் போடப்பட்ட Canula ஊடாக ஏற்ற முடியவில்லை.

இதனையடுத்து 28.08.2023 ஆம் திகதியன்று அதிகாலை 4.00 மணியளவில் வைத்திய அதிகாரியும் தாதிய உத்தியோகத்தர்களும் வந்து பார்வையிட்டு குறித்த இடதுகையில் போடப்பட்ட Canula அகற்றப்பட்டது.

7.30 மணியளவில் Ward Round வந்த பெண் வைத்திய அதிகாரி ஒருவர் பிள்ளையின் கைவீக்கத்தை பார்த்து விட்டு பிள்ளையின் கையில் Mopping கொடுத்தார்.

பின்னர் காலை 10.00 மணியளவில் குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S.சரவணபவானந்தன் அவர்கள் வந்து குளிர்ந்து நீலம் பாரித்து இருந்த கையினைபார்வையிட்டுச் சென்றார்.

இதனையடுத்து மீள வருகை தந்த குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S.சரவணபவானந்தன் அவர்கள் குழந்தையின் அருகாமையிலிருந்தே உடனடியாக தொலைபேசியூடாக கதைத்ததையடுத்து வைத்திய நிபுணர் திரு.மதிவாணன் அவர்கள் வந்து கையினை பரிசோதித்து கையில் நாடித்துடிப்பு இ;ல்லை என்பதையும் கையில் இரத்த ஒட்டத்தில் ஒட்சிசன் இல்லை என்பதையும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி CT Scan பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

இதனையடுத்து அன்றைய தினம் அதாவது 28.08.2023 ஆம் திகதியன்று மதியம் CT Scan பரிசோதனை செய்யப்பட்டது.

மீண்டும் சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுக்கப்பட்டு இடது கையில் ஏற்படும் அதீத வலியைக் கட்டுப்படுத்துவதற்காக உணர்விழக்கச் செய்யும் ஊசி கையில் ஏற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் சத்திரசிகிச்சைக் எடுக்கப்பட்டு கையில் அழுத்தத்தைக் குறைப்பதற்காக இழையத்தை வெட்டிச் செய்யப்படும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

இதன்போது கையில் இரத்தகட்டி உருவாகியுள்ளதாகவும், கையில் இதன்காரணமாக இரத்தோட்டம் தடைப்பட்டிருப்பதாகவும் இந்த சத்திரசிகிச்சை செய்யப்படவிருப்பதாக கூறப்பட்டது.

இரத்தக்கட்டியை கரைக்கும் Heparin எனப்படும் மருந்தும் தொடர்ச்சியாக ஏற்றப்படவிருப்பதாக வைத்திய நிபுணரால் தெரியப்படுத்தப்பட்டது.

குறித்த சத்திரசிகிச்சையின் பின்னர் எமது மகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை 29.08.2023 ஆம் திகதியன்று மதியம் மீளவும் சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுக்கப்பட்டு இரத்தக்கட்டியைக் கரைப்பதற்கான சத்திரசிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்தும்Heparin ஏற்றப்பட்டு வந்தது.

தொடர்ந்தும் அடுத்து வந்த இரு நாட்களுக்கு அதாவது 30.08.2023 மற்றும் 31.08.2023அதாவது புதனும் வியாழனும் மருந்து ஏற்றப்பட்டு வந்தது.

ஆயினும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதோடு மகளின் கை பழைய நிலைக்குத் திரும்பவில்லை.

மாறாக கையின் கறுப்பு நிறம் அதிகரித்துக் கொண்டு சென்றதோடுதொடர்ந்தும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

01.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வருகை தந்த பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணரால் மேலதிக கிருமித்தொற்று நிலையையும் உயிராபத்தையும் தடுக்க எமது மகளின் இடது கை மணிக்கட்டுக்குக் கீழான பகுதி அகற்றப்பட
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்பிரகாரம் அடுத்த நாள் 02.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில்சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எமது மகள் எடுக்கப்பட்டு இடது கை மணிக்கட்டின் கீழான பகுதிமுற்றாக அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எமது மகள் இன்னமும் அதிதீவிர சிசிக்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பில் பின்வரும் விடயங்களை தங்களது கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

1. எமது மகள் வைசாலி காய்ச்சல் காரணமாகவே விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
2. காய்ச்சலுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தவறான முறையிலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் வழங்கப்பட்டுள்ளது.
3. Cannula வைத்தியரால் போடப்பட்டிருக்கவில்லை. தாதிய உத்தியோகத்தராலேயே குறித்த Cannula போடப்பட்டது.
4. அவ்வாறு தாதிய உத்தியோகத்தரால் போடப்பட்ட குறித்த Cannula சரியான முறையில் போடப்பட்டிருக்கவில்லை.
5. மருந்து உரிய முறையில் உட்செலுத்தப்படவில்லை. Saline உடன் கலந்து ஏற்றப்படவேண்டிய மருந்து Cannula ஊடாக நேரடியாக உட்செலுத்தப்பட்டது.
6. மருந்து அவ்வாறு நேரடியாக உட்செலுத்தப்பட்டதும் ஏற்பட்ட வலி மற்றும் தாக்கங்கள் குறித்து உடனடியாக தாயாரால் தாதிய உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் பாரதூரமான அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் குறித்த கையின் நிலை குறித்து உடனடியாக கவனத்தில் எடுக்கப்படாமை, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கபடாமை

மேற்குறித்த நடவடிக்கைகள் மூலம் எமது எட்டு வயதான மகளின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டு எமது மகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குட்படுத்தப்பட்டு சவாலானாக மாற்றப்பட்டுள்ளது.

இது எமக்கும் எமது மகளுக்கும் நிரந்தர சேதத்தை உண்டுபண்ணியதோடு ஈடுசெய்யமுடியாத இழப்பு நேர்ந்துள்ளது.

எமது மகளின் இந்நிலைக்கு 12ஆம் விடுதியின் தாதிய உத்தியோகத்தர்களும் வைத்தியர்களும் வைத்திய நிபுணரும் வைத்தியசாலை நிர்வாகமுமே காரணமாகும்.

குறித்த 12 ஆம் விடுதியில் சம்பவம் நடைபெற்ற போது உத்தியோகபூர்வமாக கடமையில் இருந்த House Officer, Senior House Officer குறித்த விடுதிக்கு பொறுப்பான குழந்தைநில வைத்திய சிகிச்சை நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன், வைத்திய சாலை பணிப்பாளரான தாங்கள் என அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிய கடமைவாய்ந்த உத்தியோகத்தர் ஆவர்.

எனவே எமது மகளுக்கு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த தாதிய உத்தியோகத்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், விடுதிக்குப் பொறுப்பான வைத்திய சிகிச்சை நிபுணர் அனைவருக்கும் எதிராக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியான விசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

விசாரணை முடிவில் குறித்த சம்பவத்துக்கான (கை அகற்றப்பட்டதற்கான) சரியான மருத்துவ காரணத்தையும் எழுத்து மூலம் அறியத்தர வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ நிராகரிப்புக்களினால் உயிர் இழப்புக்கள் அவய இழப்புக்கள் ஏற்படா வண்ணம் எங்களுடைய சமூகத்தை பாதுகாக்கும்படி பாதிக்கப்பட்ட எங்களது குழந்தையின் சார்பில் வேண்டி நிற்கின்றோம்.

எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள குற்றவியல் மற்றும் குடியியல் வழக்கு நடவடிக்கைகளை மட்டுப்படுத்தாமலும், அதற்கு பங்கம் ஏற்படாதவாறும் இக்கடிதம் அனுப்பப்படுகிறது – என்றுள்ளது.