LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிடைக்கும் ராஜதந்திர வாய்ப்புகளைப் பயன்படுத்துவது | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

சனல் நாலு வெளியிட்ட வீடியோவை முதலில் அதிகமாக பரவலாக்கியதும் பரப்பியதும் சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைத்தளக் கணக்குகள் தான். அந்த ஆவணப் படத்தில் பிள்ளையானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால், சாணக்கியனுக்கு ஆதரவான தரப்புகள் அதை வேகமாகவும் அதிகரித்த அளவிலும் பரப்பினார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சாணக்கியன் ஆகிய இரண்டு தரப்புகளிடமும் பலமான சமூக வலைத்தள பிரச்சாரகக் கட்டமைப்பு ஒன்று உண்டு. சாணக்கியனுக்கு ஆதரவான கட்டமைப்புக்கூடாகத்தான் இப்பொழுது பிள்ளையானுக்கு எதிரான அசாத் மௌலானாவின் சாட்சியம் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

சனல் நாலு வெளியிட்டிருக்கும் வீடியோவானது ரணிலைப் பலப்படுத்தும் மேற்கத்தய நிகழ்ச்சி நிரலின் பிரதிபலிப்பு எனலாம். அதே சமயம் அதில் தமிழ் மக்களுக்குச் சாதகமான அம்சங்கள் உண்டு. இலங்கை அரசுக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் குற்றச்சாட்டுக்கள் அந்த வீடியோவில் உண்டு. தமிழ் மக்கள் ஏன் பரிகார நீதியை கேட்கின்றார்கள் என்பதற்கு தேவையான தர்க்கபூர்வமான சான்றுகளை அந்த வீடியோ வெளிப்படுத்துகின்றது. அந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் உண்மையான இல்லையா என்பதனை விசாரிப்பதற்கு அனைத்துலக விசாரணை வேண்டும் என்று இலங்கைத் தீவில் உள்ள மூன்று இனத்தவர்களும் கோரிக்கை முன்வைப்பது ஒரு விசேஷமான விடயம். இவ்வாறு இலங்கை தீவில் உள்ள மூன்று இனங்களும் இந்த ஒரு விடயத்தில் ஒரே விதமான கோரிக்கைகளை முன்வைக்கின்றன. இது சனல் நாலு வீடியோவுக்குள்ள ஒரு தனி விசேடமான அம்சம்.

எனவே சனல் நாலு வெளியிட்ட வீடியோவானது இலங்கைத் தீவில் மேற்கு நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் நோக்கிலானது என்பது அதன் ஒரு பரிமாணம். இன்னொரு பரிமாணம் அது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு பலம் சேர்க்கின்றது.

சனல் நாலு வீடியோ மட்டுமல்ல, இந்தப் பூமியிலே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அல்லது இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு எதிராக வெவ்வேறு நாடுகள், அனைத்துலக நிறுவனங்கள் முன்னெடுக்கும் வெவ்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் ஈழத்தமிழர் கெட்டித்தனமாகக் கையாள வேண்டிய வாய்ப்புகள்தான். அவ்வாறான வாய்ப்புகளை வழங்கும் மேற்கத்திய மற்றும் பிராந்திய அளவிலான நகர்வுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

முதலாவதாக, அமெரிக்க கண்டத்தில் அங்குள்ள இரண்டு பெரிய நாடுகளாகிய அமெரிக்காவும் கனடாவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் அதன் படைப்பிரதானிகள் சிலருக்கு எதிராகவும் நிர்ணயகரமான நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றன. இலங்கைத் தீவின் இப்போதுள்ள படைத் தளபதியை அமெரிக்கா நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்திருக்கிறது. அதுபோலவே முன்னாள் கடற்படை தளபதி ஒருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு வழக்குத் தொடுக்க முடியும். அவ்வாறு மூத்த ராஜபக்சக்கள் இருவருக்கும் எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கத் தேவையான வாய்ப்புகளை அந்தச் சட்டம் அதிகப்படுத்தியிருக்கிறது. இது முதலாவது.

இரண்டாவதாக,கனடாவில் இனப்படுகொலை தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தவிர,மூத்த ராஜபக்சக்கள் இருவருக்கும் எதிராக இந்த ஆண்டு மார்ச் மாதம் கனடா தடைகளை விதித்திருக்கின்றது. அதன்படி அவர்கள் அந்த நாட்டில் தமது பினாமிகளின் ஊடாகக்கூட முதலீடுகளைச் செய்ய முடியாது.

இவை தவிர கனேடியப் பிரதமர் கடந்த மே 18ஆம் திகதியன்று தன்னுடைய உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு சாதகமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.அப்பதிவை  எத்தனை லட்சம் தமிழ் மக்கள் திரும்பத் திரும்பரீ ருவீற்” பண்ணினார்கள்? அங்கேதான் தெரிகிறது தமிழ் மக்களின் இலத்திரனியற் கட்டமைப்புகளின் பலவீனம். கனேடியப் பிரதமரின் கருத்துக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதாவது அதை இலங்கை அரசுக் கட்டமைப்பு எதிர்கின்றது. அப்படி என்றால் அதைத் தமிழ் மக்கள் எப்படி கையாள வேண்டும்? கனேடியப் பிரதமரின் உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்துக்கு சென்று அவர் அங்கே பதிவிட்டிருப்பதை திரும்பத் திரும்ப லட்சக்கணத்தில் கோடிக்கணக்கில்ரீ ருவீற்” பண்ண வேண்டும். அது அவருக்கு உற்சாகமூட்டும். தமிழ்மக்கள் கனடாவோடு தமது சகோதரத்துவத்தை, வாஞ்சையை தெரிவிப்பதற்கு அது ஒரு அருமையான சந்தர்ப்பமாக இருந்தது. ஆனால் எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது தமிழ் அமைப்புகள் அல்லது செயற்பாட்டாளர்கள் அதை அவ்வாறு நோக்கின? கையாண்டன?

கனடாவின் மேற்கண்ட நடவடிக்கைகள் அங்குள்ள பலமான தமிழ் புலம்பெயர் சமூகத்தின் வாக்குகளைக் கவரும் நோக்கிலானவை என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அவை அவற்றின் விளைவுகளைக் கருதிக்கூறின் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்குப் பலம் சேர்ப்பவை

மூன்றாவது நகர்வு,கடந்த ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 46\1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு அலுவலகம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் இயங்கி வருகிறது. அங்கே சேகரிக்கப்படும் தகவல்கள் என்றைக்கோ ஒரு நாள் இலங்கைக்கு எதிராக கையாளப்படத் தக்கவை.

இந்த வாரம் தொடங்கிய ஐநா கூட்டத் தொடரில் எனது உரிமைகள் ஆணையாளர் அந்த அலுவலகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதில் தமிழ் தரப்பு மனித உரிமை மீறல்களும் தொடர்பான தரவுகளும் இருக்கும். ஏனெனில் ஐநா அதை தமிழ் நோக்கு நிலையில் இருந்து தொகுக்கவில்லை. சீன விரிவாக்கத்தின் கருவிகளாக காணப்படும் ராஜபக்ச சகோதரர்களை எப்பொழுதும் சுற்றி வளைத்து வைத்திருக்கும் ராஜதந்திர உள்நோக்கங்கள் ஐநா தீர்மானங்களில் உண்டு.ஆனாலும் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அரசியல் பாரம்பரியமும் பொறுப்புக்கூறலுக்கு உகந்தவை அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு அவை உதவும்.

நான்காவது நகர்வு, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ராமேஸ்வரத்தில் வைத்துக் கூறிய கருத்துக்கள். இலங்கை தீவில் இடம் பெற்றது பெரிய மனித படுகொலை அல்லது இனப்படுகொலை என்ற பொருள்பட அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள் இருந்து ஈழ ஆதரவாளர்களை பிரித்து எடுப்பதற்கான ஒரு உத்தியாகத்தான் அமித் ஷா அப்படிச் சொன்னார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஒரு உள்துறை அமைச்சர்.அவர் அவ்வாறு கூறியிருப்பதை ஈழத் தமிழர்கள் பொருத்தமான விதங்களில் கையாளலாம்.ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து இலங்கையில் நடப்பது இனப்படுகொலை தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறினார்.அடுத்த ஆண்டு அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சவான் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றில் இனப்படுகொலையின் கூறுகள் உண்டு என்று கூறினார். இப்பொழுது அமித் ஷா கூறியிருக்கிறார்.

அமித்ஷா கூறியிருப்பது பெருமளவுக்கு உள்நாட்டுத் தேர்தல் தேவைகளுக்கானதாக இருக்கலாம். ஆனால் அதை ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து வெற்றிகரமாகக் கையாள வேண்டும் அதற்குரிய உபாயங்களை ஈழத்தமிழர்கள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது தொகுத்து பார்க்கலாம் கனடாவோ அமெரிக்காவோ அல்லது இந்திய உள்துறை அமைச்சரோ அல்லது .நாவோ அல்லது ஏனைய உலகப் பொது நிறுவனங்களோ சனல் நாலோ, தமிழ் தேசிய நோக்கு நிலையில் இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது; அம்புலிமாமாக் கதை போன்றது.அரசியல் என்பது நலன் சார் உறவுகளின் இடையூடாட்டம் தான்.அங்கே அறநெறி,நீதி நியாயம் போன்றவை இரண்டாம் பட்சம். உலக நாடுகளும் உலக பொது நிறுவனங்களும் உலகளாவிய ஊடக நிறுவனங்களும் தங்கள் தங்கள் நலன்சார் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும். தமது அரசியல் பொருளாதார இலக்குகளை முன்வைத்தே எந்தவோர் அரசும் வெளிவிவகார முடிவுகளை எடுக்கும்.எனவே வெளியரசுகளும் ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்களும்,சனல் நாலு போன்ற ஊடகங்களும் ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து முடிவுகளை எடுக்க மாட்டா

ஆனால் இலங்கை சம்பந்தப்பட்ட அவர்களுடைய நகர்வுகள் ஈழத் தமிழர்கள் தமக்குச் சாதகமாகக் கையாளத்தக்கவைகளாக இருக்கும்.அவற்றைப் பொருத்தமான விதத்தில் பொருத்தமான வேளைகளில்,வெற்றிகரமாகக் கையாண்டு நீதிக்கான தமது போராட்டத்துக்கு எப்படி அணி சேர்க்கலாம் என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். கிழக்கில் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்காக சாணக்கியனின் அணி இலத்திரனியல் ஊடகங்களை வெற்றிகரமாகக் கையாளுகின்றது. ஈழத் தமிழர்களின் வெளியுறவு நடவடிக்கைகள் பொறுத்தும் அவ்வாறான கருத்துருவாக்கக் கட்டமைப்புகளை ஈழத் தமிழர்கள் உருவாக்க வேண்டும். தேர்தல் நோக்கு நிலையில் இருந்தன்றி தேசத்தைக் கட்டி எழுப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து அவ்வாறான கட்டமைப்புகளை உருவாக்கினால்தான் மேற்சொன்ன அனைத்துலக வாய்ப்புகளை வெற்றிகரமாகக் கையாளலாம்.இல்லையென்றால் வெறுவாய் சப்பிக்கொண்டு வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல்தான் தொடர்ந்துமிருக்கும்.