வடக்கில் 9543 ஏக்கர் காணி படையினரால் அபகரிப்பு : விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீதரன் எம்.பி. கோரிக்கை
Share
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகத் திரட்ட முடிந்த தகவல்களைக் கொண்டு, தன்னால் தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4378.8 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2433.79 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1578.27 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 1021.55 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 130.77 ஏக்கருமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 9543.18 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















