LOADING

Type to search

இலங்கை அரசியல்

க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்காக யாழ்ப்பாணத்தில் கல்விக் கண்காட்சி!

Share

எதிர்வரும் 17ம் மற்றும் 18 ஆம் திகதிகளில் மாபெரும் இலவச கல்வி கண்காட்சி ஒன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக Jaffna Edu Expo கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.அஞ்சலிகா தெரிவித்துள்ளார்.

குறித்த கண்காட்சி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு 13-08-2024 அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாபெரும் கல்வி கண்காட்சியான் Jaffna Edu Expo கண்காட்சி மேற்குறித்த திகதிகளில் காலை 9.00 மணியில் இருந்து பிற்பகல் 5.00 மணிவரை இந்த கல்வி கண்காட்சி இடம்பெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமான ஒரு கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் அடுத்த கட்டம் எந்த கல்வியை தெரிவுசெய்ய வேண்டும், அவர்களது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்று தெரியாமல் தடுமாடுகின்றார்கள். ஆகவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவுபடுத்தலை அவர்களுக்குள் ஏற்படுத்தும் முகமாக இந்த கல்வி கண்காட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்விக் காண்காட்சியில், இலங்கையில் உள்ள அனைத்து கல்விசார் நிறுவனங்களும் பங்குபற்றவுள்ளன. எனவே குறித்த திகதிகளில் நீங்கள் வருகை தந்தால் பூரணமான ஒரு தெளிவூட்டலை பெற்றுக் கொள்ளலாம்.

முன்பொரு காலத்தில் வடபகுதியானது கல்வியில் சிறந்த நிலையில் விளங்கினாலும் தற்போது அந்த நிலை வீழ்ச்சியடைந்து செல்கின்றது. அதற்கான காரணம் மாணவர்களுடைய பார்வை வேறு திசைகளை நோக்கி திருப்பப்பட்டதாக கூட இருக்கலாம். ஆகையால் அப்படியான பார்வையில் இருந்து மாணவர்களுடைய பார்வையை கல்விக்குள் கொண்டு வருவதற்காகவே நாங்கள் இந்த கல்விக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.