LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிருஷாந்தி குமாரசுவாமி நினைவேந்தலில் கொழும்பு மனித புதைகுழிக்கு நீதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது

Share

இரண்டு மாதங்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தின் துறைமுகப் பகுதியில் தற்செயலாக எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, அது பாரிய மனித புதைகுழி என்பதற்கான ஆதாரம் தற்போது வெளிவந்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே ஆகியோர் தலைமையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் மாணவி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதுடன், செம்மணி நினைவுத் தூபிக்கு முன்பாக வார இறுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அப்பகுதி சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கிருஷாந்தி குமாரசுவாமி

சுண்டிக்குளி மகாவித்தியாலய மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி, 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, செம்மணி சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து புதைக்கப்பட்டார்.

அவரது தாமதத்தால் பதற்றமடைந்த அவரது தாயார் ராசம்மா குமாரசாமி மற்றும் பிரணவன் குமாரசாமி குடும்ப நண்பரான சிதம்பரம் கிருபாமூர்த்தியுடன் செம்மணி சோதனைச் சாவடிக்குச் சென்று விசாரித்தனர்.

கிரிஷாந்தி பற்றிய எந்தத் தகவலும் தமக்குத் தெரியாது எனக் கூறிய சோதனைச் சாவடியின் படையினர், மூவரையும் ஒரு பதுங்கு குழிக்குள் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்திருந்தனர். அன்று இரவு இராணுவத்தினர் பிரணவன், கிருபாமூர்த்தி ஆகியோரை கயிற்றால் கழுத்தை நெரித்து, இருவரின் உடல்களையும் பாதுகாப்புச் சாவடிக்குப் பின்னால் புதைத்தனர். அவர்களின் ஆடைகளை தனியாக புதைத்தனர். இராசம்மாவையும் அதே வழியில் கொலை செய்த இராணுவத்தினர், உடலை சோதனைச் சாவடிக்குப் பின்னால் புதைத்தனர்.

கிரிஷாந்தி குமாரசுவாமி கூட்டு பாலிஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அரசாங்கப் படைகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு அப்போதைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தது.

அதன் பின்னர், நான்கு சிவிலியன்கள் காணாமல் போனமை தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கு கிடைத்த அநாமதேய மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, செம்மணி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கமைய செம்மணி இராணுவ சோதனை சாவடி அருகே புதைக்கப்பட்ட நிலையில் நான்கு அழுகிய உடல்கள் மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.

9 இராணுவ வீரர்கள் மீது 18 குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட குழு வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் பிற வாய்மொழி ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியது.

இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் காணப்பட்ட 5 இராணுவ வீரர்களான ராஜபக்ச தேவகே சோமரத்ன ராஜபக்ச, ஜே.எம்.ஜயசிங்க, ஜி.பி.பிரியதர்ஷன மற்றும் ஏ.எஸ்.பிரியஷாந்த பெரேரா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று இராணுவ உறுப்பினர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 4 இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரஞ்சித் அபேசூரிய மற்றும் சட்டத்தரணி ரஞ்சித் பெர்னாண்டோ மற்றும் பல சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்த போதிலும், அதனை ஆராய்ந்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என தீர்மானித்தார்.

செம்மணி வெகுஜன புதைகுழிகள்

கிரிஷாந்தி குமாரசுவாமி புதைக்கப்பட்ட பிரதேசத்தில் மேலும் நானூறு முதல் ஐந்நூறு சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் வெகுஜன புதைகுழி தோண்டப்பட்ட நேரத்தில், ஐந்து பேர் கொண்ட குழு 15 பாதுகாப்புப் படையினரை பொறுப்புக்கூறியதோடு நான்கு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. மாறாக 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமா அதிபர் அலுவலகத்தில் இருந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மொஹான் பீரிஸின் ஏற்பாட்டில் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் நான்கு பேரும் பதவி உயர்வு பெற்றனர். பின்னர் சட்டமா அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி பீரிஸ், இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் எழுந்த போரின் போது அரசாங்கத்தின் பிரதான சட்ட ஆலோசகராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு பிரதம நீதியரசர் பதவியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு பதிலாக மொஹான் பீரிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்தார். இன்று அவர் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக செயற்படுகின்றார்.