அதிமுக போராட்டத்தில் பங்கேற்க முடியாதென எஸ்.பி.வேலுமணி தரப்பு கூறியுள்ளது
Share
அதிமுக போராட்டத்தில் பங்கேற்க முடியாதென எஸ்.பி.வேலுமணி தரப்பு கூறியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இதில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்தனர். அதிமுக தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கூறி வருகின்றனர். பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு எஸ்.பி. வேலுமணி தரப்பினர் 2 முறை கடிதம் எழுதியும் இபிஎஸ் எந்த பதிலும் தரவில்லை என கூறப்படுகிறது. சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று (ஆக. 12, புதன்) இரவு ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசைக் கண்டித்து, ஆகஸ்ட் 14-ல் அதிமுக மாநில தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. திடீர் திருப்பமாக, காவேரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து அதிமுக அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குகிறோம். ஆனால் சொந்த மாவட்டத்தை விடுத்து வேறு மாவட்டத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள இயலாது. இது எங்களை புறக்கணிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது. எங்களுக்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்ற உறுதி என்னானது? ஏற்கனவே நாங்கள் வகித்து வந்த பதவிகளை வழங்க வேண்டும் என வேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது.















