LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் ‘டெங்கு’ நோயின் விஸ்வரூபம் 83 ஆயிரத்தைக் கடந்த நோயாளர்களாய் உயர்ந்தது

Share

– 175 பகுதிகள் அதிஅபாய மண்டலங்களாகவும் பிரகடனம்.

ந.லோகதயாளன்.

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 83 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், டெங்குக் காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் இதுவரை 61 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 17 ஆயிரத்து 779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 665 நோயாளர்கள் கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44 ஆயிரத்து 359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் ‘அதிஅபாய மண்டலங்களாக’ சுகாதாரத் துறையினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாகப் பேணுவதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.