கண்காணிப்பு கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டம் அறவிட்ட நல்லூர் பிரதேச சபை!
Share
பு.கஜிந்தன்
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து நாசமாக்கப்பட்டது.
எனினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன் தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளது.















