‘பிரௌன் மணி’ திரைப்படத்தின் பதாகையை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ்
Share
ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் மற்றும் ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான “பிரௌன் மணி” படத்தின் தலைப்பையும் பதாகையையும் நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார். இந்த முதல் பதாகை ஒரு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிரவுன் மணி படத்தில் ராம் நிஷாந்த் மற்றும் ஜெ.எஸ்.கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கதிரவன் சம்பத் இயக்கியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகும் இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சக்தி சுப்ரமணியன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங்கை சுந்தர் எஸ். கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை அபர் மேற்கொண்டுள்ளார். மேலும், “சிங்-சவுண்ட்” முறையில், முழுவதும் லைவ் சவுண்டுடன் உருவாகும் இந்தப் படம், சவுண்ட்கோலிஸ் குழுவின் ஒலித் தொழில்நுட்ப வடிவமைப்பில், இயல்பான மற்றும் ஆழமான ஒலி அனுபவத்தை வழங்கவுள்ளது. இந்தத் திரைப்படத்தை கவின் ஜிடி இணை தயாரிப்பாளராகவும், ரியோ ராஜ் மற்றும் ரமேஷ் தயாரிப்பாளர்களாகவும் தங்கள் நிறுவனங்களின் கீழ் உருவாக்கியுள்ளனர்.
தென்னிந்தியாவின் பல பகுதிகளில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ள பிரவுன் மணி, இயற்கை அழகும், கலாச்சார பழக்கங்களும் நிறைந்த காட்சிகளால் கதைக்கு ஆழத்தை வழங்குகிறது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படம், இரண்டு நண்பர்களின் உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் குடும்ப எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. நகைச்சுவை, எமோஷன் மற்றும் ஈர்க்கக்கூடிய கதை சொல்லலின் கலவையுடன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப்படம் உருவாகியுள்ளது. டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியான நிலையில், பிரவுன் மணி ஒரு உற்சாகமான மற்றும் மனதைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.















