’மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.. மிரட்டலுக்கு திமுக பயப்படாதென சேகர்பாபு பேசினார்
Share
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. இது போன்ற மிரட்டலுக்கு திமுக பயப்படாதென முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசினார். சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டு இருந்தபோது தங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனக்கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. ”குன்னூர் என்பது சுற்றுலா பகுதி. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரக்கூடிய பகுதி. அப்பகுதியில் வாகனங்கள் நிற்கமுடியாத சூழல் உள்ளது. பக்தர்கள் மட்டுமின்றி, கோடைக்காலங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கும் சேர்த்துதான் ரூ.10 கோடியில் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நலிவடைந்த திருக்கோவில்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்வதற்கும், வருவாயை பெருக்குவதற்காகவும்தான் கார்பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. அறிவுசார்ந்த அனைவரும் இதை வரவேற்பார்கள். திராவிட மாடல் ஆட்சியில் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை பற்றி முழுமையாக அறியாமல் தற்போதைய அமைச்சர் பேசிக்கொண்டு இருக்கிறார். நெருக்கடி காலத்திற்கே அஞ்சாத இயக்கம் திமுக. இது போன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. இது போன்ற மிரட்டலுக்கு திமுக பயந்து நிற்காது. குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும். திமுகவை இன்னும் அடிக்க அடிக்க உயர்ந்து எழும்புகிற பந்தாகத்தான் இருக்கும். நாங்கள் மேலும் மேலும் நிமிர்ந்து எழுந்து திமிறி நிற்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.
















