பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் `திடீர்’ மரணம்
Share

தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் நாறும்பூ நாதன் (வயது 64). தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சொந்த ஊராக கொண்ட நாறும்பூ நாதன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் உள்ளனர். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் தீபக் வெளிநாட்டில் வசித்து வருகிறார். நெல்லை சாந்திநகரில் வசித்து வந்த நாறும்பூ நாதன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில் நாறும்பூநாதன் காலை நடைபயிற்சி சென்ற போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் காலமானார். அவரது உடல் சாந்திநகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள் நாறும்பூ நாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு
நூல்களை எழுதியுள்ள நாறும்பூநாதன் தென் தமிழகத்தின் தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். இவருக்கு தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது வழங்கி கவுரவித்துள்ளது.