LOADING

Type to search

இந்திய அரசியல்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் – ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

Share

இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில், திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். 24 உரிமை முழக்கம் என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை ம.தி.மு.க. வழிமொழிகிறது. மாநில சுயாட்சி செயல்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் ஆளுனர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும். சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். குடியுரிமை திருத்தச்சட்டம் ரத்து செய்யப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 500 என்றும், பெட்ரோல் ரூ. 75 என்றும், டீசல் ரூ. 65 என்றும் நிர்ணயிக்கப்படும். 100 நாள் வேலைக்கு ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். வேலை நாள் 150 நாட்களாக உயர்த்தப்படும். ஒரேநாடு ஒரே தேர்தல், பொதுசிவில் சட்டம் கைவிடப்படும். நீட் தேர்வுக்கு மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும். இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதம் என்பதை உயர்த்த சட்ட திருத்தம் கொண்டுவரப்படும். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும். மக்களின் சுதந்திரத்தில் நியாயமற்றமுறையில் தலையிடும் சட்டங்களும், விதிகளும் ரத்து செய்யப்படும். மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலையின்மையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.