LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – 2,000 பேர் கைது

Share

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. இதனால் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போராட்டக்களமாக மாறி உள்ளன. காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பலனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இதற்கிடையே சுமார் 30 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 18-ந்தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்தனர், இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டத்தை தடுக்க பல்கலைக்கழகங்களில் கலவர தடுப்பு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர். புளோரிடா உள்ளிட்ட சில பகுதிகளில் காவல்துறை போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். மேலும் சில இடங்களில் காவல்துறை வன்முறையை கையாள்வதாகவும், போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது