LOADING

Type to search

இந்திய அரசியல்

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்கள் உயிரிழப்பு

Share

ராமேஸ்வரம் அருகே அரசு பேருந்து மீது, கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவரது மனைவி பாண்டிச்செல்வி (28). இவர்களுக்குப் பிறந்து இரண்டு வாரங்களே ஆன ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று விட்டு, மீண்டும் தங்கச்சிமடத்திற்கு வாடகை காரில் சனிக்கிழமை நள்ளிரவு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களோடு ராஜேஷின் மகள்கள் தர்ஷினா ராணி (08), பிரணவிகா (05), ராஜேஷின் மாமனார் செந்தில் மனோகரன் (70), மாமியார் அங்காலேஸ்வரி (60) ஆகியோர் காரில் பயணித்துள்ளனர். அக்காள் மடத்தைச் சேர்ந்த சவரி பிரிட்டோ (35) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். இரவு 12.30 மணியளவில் திருப்பத்தூரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பயணி ஒருவர் வாந்தி எடுத்தால், பேருந்தின் ஓட்டுநர் நெடுஞ்சாலையில் நிறுத்தி உள்ளார். அப்போது, ராஜேஷ் குடும்பத்தினர் வந்து கொண்டிருந்த கார், அரசு பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ராஜேஷ், அவரது மகள்களான தர்ஷினா ராணி, பிரணவிகா, மாமனார் செந்தில் மனோகரன், மாமியார் அங்காலேஸ்வரி ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி, இரண்டு வார ஆண் குழந்தை, டிரைவர் சவரி பிரிட்டோ ஆகிய மூவரும் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததால் தங்கச்சிமடம் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.