LOADING

Type to search

இந்திய அரசியல்

காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர்? – இணை ஆணையர் விளக்கம்

Share

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் குறித்து காவல்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (41). இவர் மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்கு, 10க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ரவுடி பாலாஜி 12 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரபல ரவுடி சிடி மணி வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில், காக்காதோப்பு பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த காக்காதோப்பு பாலாஜி தலைமறைவானார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜி அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதியில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் ஆய்வு செய்தார். ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் இணை ஆணையர் கேட்டறிந்தார். பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வாகன தணிக்கையின்போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது. கஞ்சாவுடன் தப்பி சென்றவரைதான் காவல்துறை விரட்டிச் சென்று சுற்றிவளைத்தனர். பாலாஜி சுட முயன்றதால்தான் காவல்துறை பதில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானது. பாலாஜியின் இடது மார்பில் காயம் ஏற்பட்டது. காவல்துறை சோதிக்கும்போது அவனுக்கு உயிர் இருந்தது. மறை தாக்குதலுக்கு பிறகே, அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. காக்கா தோப்பு பாலாஜி மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பாலாஜியுடன் உடன் காரில் வந்த மற்றொரு நபரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வந்த காரில் இருந்து 10 கிலோ கஞ்சா, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று இணை ஆணையர் பிரவேஷ் குமார் கூறினார்.