LOADING

Type to search

இந்திய அரசியல்

அரசுடன் ஓரணியில் நின்று, மக்களை காக்க வேண்டுமென திமுகவினருக்கு உதயநிதி அறிவுறுத்தினார்

Share

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு களத்தில் நின்று உதவ வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. சென்னையில் இன்று அதிகாலையில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் களத்தில் நின்று மக்களுக்கு உதவ வேண்டும் என்று தணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சீரிய முறையில் மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.

முதலமைச்சர், நான், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி மழைப் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மழைநீர் வடிவதை உறுதி செய்வது, தற்காலிகத் தங்குமிடங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, உணவு, பால், பிரெட் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது என இப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், கழகத்தின் முதன்மையான அணியான திமுக யூத் விங் சார்பிலும் நம் நிர்வாகிகள் பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதை நான் அறிவேன். மழை இடைவிடாது பெய்வதாலும், வானிலை எச்சரிக்கை தொடர்வதாலும், தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிட வேண்டிய பொறுப்பு இளைஞர் அணியின் ஒவ்வொரு நிர்வாகிக்கும், உறுப்பினர்களுக்கும் உள்ளது.

ஆகவே, மழைக்கால நிவாரணப் பணிகளை மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊர்க்கிளை அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் இன்னும் வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கைகளைக் கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து நிறைவேற்றித் தரும் பணியை இளைஞர் அணியினர் செய்து கொடுக்கலாம். அதேபோல, அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாகச் செயல்படுவது அவசியம். மேலும், தமிழ்நாடெங்கும் தன்னார்வலர்கள் மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நம் இளைஞரணியினர் துணைநின்று வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இளைஞர் அணி நிர்வாகிகளின் மழைக்கால நிவாரணப் பணிகளை மாநிலத் துணைச் செயலாளர்கள் ஒருங்கிணைப்பார்கள். ஓரணியில் நிற்போம் – பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.