தொகுதி மறுவரையறை பிரச்சினையை உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது – ஜி.கே.வாசன்
Share

தொகுதி மறுவரையறை பிரச்சினையை உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை, பணிகளை மேற்கொள்ளும் போது தமிழ்நாட்டிற்கு அதிகப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கும், பொது மக்களுக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. அப்படி ஒரு அதிகாரபூர்வமான முடிவை மத்திய அரசு எடுக்கும்போது விதிகள் வகுக்கப்படும். பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து அதற்கான சட்டத்திருத்தங்கள், கோட்பாடுகள் மட்டுமல்லாமல் குழு (கமிட்டி) அமைத்து வரையறை செய்ய ஏற்பாடு செய்யப்படும். எனவே தமிழகத்தின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்தே. அதே நேரத்தில் மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்திற்கு தொகுதிகள் குறையும் என்று உத்தேசமாக நினைப்பதும், கூறுவதும் ஏற்புடையதல்ல. குறிப்பாக இந்தப் பிரச்னையை உறுதியாக அணுக வேண்டுமே தவிர உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது. எனவே தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) உறுதியாக இருப்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.