LOADING

Type to search

இந்திய அரசியல்

2ஜி வழக்கு குறித்த மத்திய அரசின் புதிய மனு – உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

Share

2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

     கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி 2ஜி வழக்கில், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றைகளை ஒதுக்க வேண்டும் எனவும் மற்றும் 2008-ம் ஆண்டு ஆ.ராசா, தொலைத்தொடர்பு துறை மத்திய அமைச்சராக இருந்த போது, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றை விற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அப்போது வழங்கிய உத்தரவில் திருத்தம் செய்யக் கோரியும், சட்டத்தின் அடிப்படையில் நிர்வாக நடைமுறைகள் மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தது. மேலும் அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நோக்கில் மட்டுமல்லாமல், தேசப்பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு 2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை, உச்சநீதிமன்ற விதிகள் 2013ன் ஆணை எக்ஸ்வி விதி 5 இன் கீழ், பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து உச்சநீதிமன்ற பதிவாளரின் உத்தரவில், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஆராய்ந்ததில், விண்ணப்பதாரர் தற்போதைய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்கிறோம் என்ற போர்வையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார் என்பது தெளிவாகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2ஜி வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.