LOADING

Type to search

உலக அரசியல்

“ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல”; ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கா

Share

தனது ராஜினாமாவில் அமெரிக்காவின் தலையீடு இருந்ததாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டிய நிலையில் இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5-ம் திகதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, பங்களாதேஷிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார்.

நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கானை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் கான் பதவியேற்றார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை இந்த ஆட்சி தொடரும் என்ற செய்தியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பதவி விலகிய பின் ஷேக் ஹசீனா அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி பதவி விலகல் குறித்தும் அதற்கு பின்னால் உள்ள சதி குறித்தும் முதல்முறையாக ஷேக் ஹசீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “மார்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் நான் பதவியில் நீடித்திருக்க முடியும். ஆனால் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை. தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன். ஒருபோதும் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுத்தர இயலாது. பிரதமர் பதவியில் நீடித்திருந்தால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கும். அதனால் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும். நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். எனவேதான், பதவியை ராஜிநாமா செய்தேன்.” என ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார்.

மேலும் “ மக்களின் வாக்குகளால்தான் நான் வெற்றிபெற்றேன். என்னுடைய வலிமையே மக்களாகிய நீங்கள் தான். நான் வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்ததால் நாட்டைவிட்டு வெளியேறினேன். மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் நான் கூறிய வார்த்தைகள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. போராட்டம் நடத்தும் மாணவர்களை பயங்கரவாதிகள் என ஒருபோதும் கூறவில்லை. அந்த நாளில் வெளியான காணொலிகளை மீண்டும் ஒருமுறை நீங்கள் பார்த்தால் உண்மை புரிய வரும்.

அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொல்லப்படுவதாகவும் அவர்களின் வீடுகள் சூறையாடப்படுவதாகவும் வெளிவந்த செய்திகளைக் கேட்டு துயரடைந்தேன். கடவுளின் கருணையால் மீண்டும் வங்கதேசம் திரும்புவேன் என நம்புகிறேன். எந்த நாட்டுக்காக என் தந்தையும் குடும்பத்தினரும் உயிர்த்தியாகம் செய்தார்களோ அந்த நாட்டின் நலனுக்காக எப்போதும் பிரார்த்திக்கிறேன். போராட்ட சூழலை பயன்படுத்தி சில குழுக்கள் மக்களை திசை திருப்பினர். இதை ஒருநாள் கண்டிப்பாக உணர்வீர்கள் என நம்புகிறேன்” என ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகலில் அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக ஷேக் ஹசீனாவின் கருத்து உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவிற்கு கருத்திற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான வேதாந்தா படேல் தெரிவித்ததாவது..

” ஷேக் ஹசீனாவின் கருத்துக்கள் நகைச்சுவையை வரவழைக்கிறது. ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது என்பது முற்றிலும் தவறானது. நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.