LOADING

Type to search

இந்திய அரசியல்

மது குடிக்க கல்லூரி மாணவியை அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்

Share

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பிரபல தன்னாட்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தக் கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த மாணவி படிக்கும் துறையின் பேராசிரியர்களாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெபாஸ்டின் (40), தூத்துக்குடியைச் சேர்ந்த பால்ராஜ் (40) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4-ந் தேதி இரவு பேராசிரியர்கள் இருவரும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு விடுதியில் மது குடித்ததாக தெரிகிறது. மது போதை அதிகமானதை அடுத்து நள்ளிரவு நேரத்தில் தனது துறையில் படிக்கும் சம்பந்தப்பட்ட மாணவிக்கு போன் செய்துள்ளனர். முதலில் பால்ராஜ், அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்க, ஜெபாஸ்டின் அந்த செல்போனை பிடுங்கி நாங்கள் 2 பேரும் மது குடித்துக் கொண்டிருக்கிறோம். மது குடிக்க வா என்று அழைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் பாளையங்கோட்டை போலீசில் 5- புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எனது மகளின் படிப்பு பாதிக்கப்படும் எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த தகவல் அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட பலரும் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்து விசாரணை நடத்தினார். அதில், பேராசிரியர்களான ஜெபாஸ்டின், பால்ராஜ் ஆகிய 2 பேரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் தூத்துக்குடியில் ஜெபாஸ்டினை கைது செய்தனர். தகவல் அறிந்து பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.