LOADING

Type to search

இந்திய அரசியல்

எஸ்.பி பாலசுப்ரமணியன் பெயரில் சாலை… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி!

Share

மறைந்த பாடகர் எஸ்.பி.பி. வாழ்ந்த சென்னை காம்தார் நகரின் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், எஸ்.பி.பி. சரண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பிபி வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண், முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்த சூழலில், சரணின் கோரிக்கையை ஏற்று காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25-9-2020 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயரிடப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.பி.பி. சரண் நன்றி தெரிவித்துள்ளார்.