LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் ரவுடி வீட்டில் மது விருந்து: போலீஸைக் கண்டதும் கழிப்பறைக்குள் பதுங்கிய டிஎஸ்பி பணியிடை நீக்கம்

Share

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் “தம்மனம் பைசல்” பிரபல ரவுடி. அவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உட்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. “தம்மனம் பைசல்” மீதுதான் கொச்சியில் முதன்முதலாக குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மேலும், ஒரு வருடம் ஊருக்குள் நுழைய இவருக்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்தது. இதையடுத்து “ஆபரேஷன் ஆக்” என்ற பெயரில் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ரவுடி தம்மனம் பைசலை போலீசார் கண்காணித்து வந்தனர். (மே 27) அவரது வீட்டில் மது விருந்து நடப்பதாகவும் ரகசியமாக சிலர் பங்கேற்பதாகவும் அங்கமாலி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.ஐ தலைமையில் போலீசார் தம்மனம் பைசலின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில்

ரவுடியின் வீட்டில் நடந்த மது விருந்தில் பங்கேற்க வந்தது ஆலப்புழா குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சாபு தலைமையிலான போலீசார் என்பது தெரியவந்தது. சோதனைக்கு வந்த அங்கமாலி போலீசை கண்டதும் டி.எஸ்.பி. சாபு பைசலின் வீட்டிலுள்ள கழிப்பறையில் ஒளிந்து கொண்டார்.

டிஎஸ்பி சாபு தலைமையில் 4 போலீசார் விருந்துக்கு வந்திருந்தது தெரியவந்தது. சோதனைக்கு வந்த அங்கமாலி போலீசார், ரவுடி தம்மனம் பைசல் உள்பட 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கம்மாலி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விருந்தில் கலந்து கொண்ட 2 போலீசார் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

முன்னதாக, டிஎஸ்பி சாபுவை தப்ப வைக்க போலீஸ் தரப்பில் முயற்சி செய்யப்பட்டது. அங்கமாலி போலீசார் சோதனைக்கு சென்றபோது டி.எஸ்.பி. சாபு அங்கே இல்லை என்று எர்ணாகுளம் எஸ்.பி. வைபவ் சக்சேனா தெரிவித்தார். ஆனால் அவர் மது விருந்துக்கு சென்றது உண்மைதான் என்று தனிப்பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இது தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து டி.எஸ்.பி. சாபுவை சஸ்பெண்ட் செய்ய டிஜிபிக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதன்படி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி சாபு இன்னும் 2 தினங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.