நாமக்கல் குமாரபாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
Share
அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டி உள்ளதால், அணைக்கு வரும் உபரி நீர் 16 கண் மதகு வழியாக அப்படியே திறந்து விடப்பட்டு வருவதால் காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவேரி கரையோர பகுதிகளான மணிமேகலை வீதி, இந்திரா நகர், கலைமகள் வீதி, சின்னப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிபாளையம் காவேரி கரையோர பகுதிகள் ஆன ஜனதா நகர், நாட்டார் கவுண்டன்புதூர், பாவடி தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 900 பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் ஆகியோர் மீட்டு அரசு ஏற்படுத்தியுள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு புடவை, வேட்டி, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.