அதிபர் திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டில் சிறப்பான வரவேற்பு
Share
அதிபர் திரவுபதி முர்முவின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் தொடங்கியது. இதன்படி அவர் பிஜி நாட்டுக்கு சென்றடைந்து உள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில், முர்மு அந்நாட்டு அதிபர் ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரை சந்தித்து இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார். அந்நாட்டில் இன்று தங்கியிருக்கும் அவர், இந்த பயணத்திற்கு பின்னர் நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்தேவுக்கு செல்கிறார். இந்தியாவில் இருந்து பிஜி தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முர்முவால், இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று உறவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த பயணத்தின்போது, பிஜி நாட்டின் நாடாளுமன்றத்தில் முர்மு உரையாற்ற உள்ளார். இதேபோன்று, இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாட உள்ளார். இதன்பின்பு, அதிபர் திரவுபதி முர்மு வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டின் ஆளுனர் ஜெனரல் சின்டி கிரோவின் அழைப்பின்பேரில் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் முர்மு, கிரோ மற்றும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோருடன் இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார்.